கரூர் குளித்தலை அருகே மேல வெளியூர் பட்டத்தளச்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா கொட்டும் மழையிலும் வெகு விமரிசையாக நடைபெற்றது. 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.


 




 


கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேலவெளியூரில் ஸ்ரீ பட்டத்தளச்சி அம்மன், விநாயகர், ஆவளி வீரக்காள்,  கருப்பசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவில் அமைந்துள்ளது. கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது என்று ஊர் பொதுமக்கள் விழா கமிட்டியினர் முடிவு செய்து புணரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தற்போது புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று காலை குடமுழுக்கு விழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த நவம்பர் 21ஆம் தேதி குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது.


 




புனிதநீர் அடங்கிய கும்பத்தினை சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, ரக்சாபந்தனம், நாடி சந்தனம் திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி உள்ளிட்ட 4 கால யாக வேள்வி பூஜைகளை செய்தனர். 4ம் கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும் சிவாச்சாரியார்கள் புனிதநீர் கும்பத்தினை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டுவந்தனர். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்கி கலசத்திற்கு புனித நீரினை ஊற்றி குடமுழுக்கு செய்தனர். கொட்டும் கன மழையிலும் கும்பாபிஷேக விழா தொடர்ந்து வெகு சிறப்பாக நடைபெற்றது.


 


 




அதனை தொடர்ந்து கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் மேலவெளியூர், தோகைமலை மற்றும் வெளியூரை சேர்ந்த 5000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொட்டும் மழையிலும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். குடமுழுக்கு விழாவிற்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.