கரூர் கல்யாண வெங்கட்ரமணசுவாமிக்கு 11 வகையான வண்ண வாசனை பூக்களால் புஷ்பாஞ்சலி விழா

அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமணசுவாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்ப திருவிழாவை முன்னிட்டு இன்று கல்யாண வெங்கட்ரமணியசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளுக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

Continues below advertisement

தென் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற பெருமாள் ஆலயங்களில் ஒன்றான தென் திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடமணசுவாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி தருகிறார்.

Continues below advertisement

ஆண்டுதோறும் இந்த ஆலயத்தில் புரட்டாசி மாதம் மற்றும் மாசி மாதம் சிறப்பான தேரோட்டம் நடைபெறுது வழக்கம். இந்நிலையில் மாசி மாத தேரோட்டம் மற்றும் தெப்பத் திருவிழா அதிலும் குறிப்பிடத்தக்க திருவிழாவாக அமைகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தான்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்று, அதன் தொடர்ச்சியாக நாள்தோறும் கல்யாண வெங்கட்ரமண சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்திலும், யானை வாகனத்திலும், குதிரை வாகனத்திலும், கஜலட்சுமி வாகனத்திலும், சேஷ வாகனத்திலும், கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி திருவீதி உலா காட்சி தந்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் கடந்த வாரத்தில் மாசி மாத தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

 

 


அதை தொடர்ச்சியாக பல்வேறு ஊர்களில் இருந்து ஆன்மீக பக்தர்கள் கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில் இந்நிலையில் இன்று ஆலய மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை  ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக சுவாமிகளுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அனுவித்த பிறகு ஆலய மண்டபத்தில் ஊஞ்சலில் சுவாமிகளை கொலுவிருக்க செய்தனர். அதை தொடர்ந்து பக்தர்கள் வழங்கிய அரளிப்பூ, சம்பங்கி பூ, மல்லிகைப்பூ, முல்லைப்பூ, துளசி உள்ளிட்ட 11 வகையான நறுமண மார்களால் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

 

 


நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயத்தின் பட்டாச்சாரியார்கள் கூடைகளில் உதிரிப்பூக்களை கொண்டு கல்யாண வெங்கட்ரமண சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறினர். அதை தொடர்ந்து சுவாமிகளுக்கு கும்ப ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. மேல தாளங்கள் முழங்க நடைபெற்ற நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கண் குளிர கண்டு மகிழ்ந்து தரிசனம் செய்தனர். மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று நடைபெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola