Kandadevi Temple: 17 ஆண்டுக்கு பிறகு போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற கண்டதேவி கோயில் தேரோட்டம்

Kandadevi Temple: 17 ஆண்டுகளுக்குப் பிறகு அமைதியாக நடைபெற்று முடிந்த கண்டதேவி தேரோட்டத்தால் அதிகாரிகளும் சுற்றுவட்டார பகுதி மக்களும் நிம்மதி அடைந்தனர்.

Continues below advertisement
தேவகோட்டை அருகே கண்டதேவி கோயில் தேரோட்டம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியாக நடைபெற்றது.
 

கண்டதேவி கோயில்

 
Kandadevi Temple: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில், சிவகங்கை சமஸ்தானம் மற்றும் அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் சொர்ண மூர்த்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற இக்கோயிலில், 4 நாட்டார்கள் எனப்படும் உஞ்சனை, செம்பொன்மாரி, தென்னீர்வயல், இறகு சேரியை சேர்ந்த கிராம மக்கள் ஒன்று கூடி இக்கோயிலின் தேரோட்டத்தை வெகு விமரிசையாக நடத்தி வந்தனர். இந்த சூழலில் பழமையாகி பழுதானதன் காரணமாக 2006-ம் ஆண்டு தேரோட்டம் நிறுத்தப்பட்டது. பின்பு புதிய தேர் உருவாக்கப்பட்டு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தேரோட்டம் நடத்த முற்பட்டபோது வடம் பிடித்து இழுப்பதில் இரண்டு சமூகத்தை சேர்ந்தவர்கள் இடையே பிரச்னை ஏற்பட்டதால், இந்து அறநிலை துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் அடிப்படையில் தேரோட்டம் நிறுத்தப்பட்டது.
 

தேர் வெள்ளோட்டம்

புதிய தேர் செய்யப்பட்ட நிலையில் தேர் வெள்ளோட்டம் நடத்தாமல் இருந்தது. தேர் வெள்ளோட்டம் நடத்த தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவுபடி கடந்த பிப்ரவரி 11-ம் தேதி தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. தேவஸ்தான ஊழியர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் இக்கோயில் ஆனித் திருவிழா ஜூன் 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருவாய்துறை காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்தைக்கு பின் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையுடன் வடம் பிடித்து தேரை இழுக்க முடிவு செய்தனர். 
 

அமைதியாக நடந்த தேர்திருவிழா

 
இந்நிலையில் இன்று தேரோட்டம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியாக நடைபெற்றது. இதற்காக முன்அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பலத்த சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேளதாளங்கள் முழங்க சொர்ணமூர்த்தீஸ்வரர் திருத்தேரில் எழுந்தருள, நீதிமன்ற உத்தரவின் படி கோயிலில் இருந்து புறப்பட்ட தேர் கோயிலை சுற்றி சுமார் ஒன்னரை கிலோ மீட்டர் தூரம் வந்து  மீண்டும் நிலையை அடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு தென் மண்டல ஐ.ஜி கண்ணன் தலைமையில், 5 டி.ஐ.ஜி ,12 எஸ்.பி உட்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்டதேவியை சுற்றிலும் 18 சோதனை சாவடிகள், 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு விரிவானபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு அமைதியாக நடைபெற்று முடிந்த கண்டதேவி தேரோட்டத்தால் அதிகாரிகளும் சுற்றுவட்டார பகுதி மக்களும் நிம்மதி அடைந்தனர்.
 
 
Continues below advertisement