காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருத்தேர் உற்சவத்தில் பிரிஞ்சி சாதம் அன்னதானம் வழங்கிய இஸ்லாமிய குடும்பத்தினர். உலகப்புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் பிரம்மோற்சவ திருத்தேர் உற்சவத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி அனைவரையும்,  மெய்சிலிர்க்க வைத்து மத நல்லிணக்கத்தை நிலைநாட்டிய இஸ்லாமிய குடும்பத்தினர். திருத்தேரில் எழுந்தருளிய வரதராஜ பெருமாளை தரிசனம் மேற்கொள்ள வந்த பக்தர்கள் ஏராளமானோர் அன்னபிரசாதம் பெற்று இஸ்லாமிய குடும்பத்தாரின் அன்னதானம் வழங்கியதை பாராட்டி வரவேற்றனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில்


உலகப்புகழ் பெற்ற அத்திவரதர் எழுந்தருளிய காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி விசாக பிரம்மோற்ச்சவமானது நடைபெற்று வருகிறது. இப்பிரமோற்சவத்தின் ஏழாம் நாளான இன்று திருத்தேர் உற்சவம்  நடைபெற்று வருகிறது.  இந்த பிரம்மோற்சவத்தையொட்டி வரதராஜ பெருமாள் திருக்கோவிலிருந்து அதிகாலை வேளையிலே புறப்பட்டு காந்தி சாலை, மூங்கில் மண்டபம், இரட்டை மண்டபம் வழியாக நான்கு ராஜ வீதிகள் வழியாக வலம் வந்து தற்போது மூங்கில் மண்டபம் வழியாக மீண்டும் திருத்தேரானது இன்னும் ஓரிரு மணி நேரங்களிலே திருத்தேரானது நிலையை அடையவுள்ளது.

 



பிரியாணி வழங்கிய இஸ்லாமிய குடும்பத்தினர்:


 

இதனையொட்டி வரதராஜ பெருமாள் வீதி உலா வரக்கூடிய வழிநெடுகிலும் ஏராளமானோர் அன்ன பிரசாதங்களை வழங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதி பகுதி வழியாக நடைபெற்ற வீதியுலாவின் போது ரகீம் என்கிற பிரியாணி கடையின் உரிமையாளர் சையது ரகீம் தனது குடும்பத்தாறுடன் மனமகிழ்ச்சியோடு இவ்வுற்ச்சவத்தையொட்டி வந்திருக்க கூடிய பக்தர்களுக்கு அன்னதானமாக பிரியாணி கடையிலே பிரிஞ்சி சாதத்தினை அன்னதானமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு வழங்கினார். இதனை பக்தர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு அன்னபிரசாதத்தினை பெற்று சென்றனர்.



இதுதாண்டா தமிழ்நாடு


சாதி ரீதியாகவும், மதரீதியாகவும் பல இடங்களில் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் மத நல்லிணக்கத்தை நிலைநாட்டக் கூடிய வகையில் இஸ்லாமிய குடும்பத்தார் திருத்தேர் உற்சவத்தை ஒட்டி வரக்கூடிய பக்தர்களுக்கு சைவ உணவு அன்னதானமாக வழங்கியது பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி நல்வரவேற்பையும் பெற்றிருந்தது.