காஞ்சிபுரம் பல்லவர்மேடு அருள்மிகு கற்பக விநாயகர் மற்றும் அருள்மிகு கன்னியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.


கும்பாபிஷேகம் / குடமுழுக்கு விழா ( Kumbhabhishekam )


கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது முன்னோர்களின் பழமொழியாக உள்ளது. அவ்வாறு. கட்டப்படும் கோவில்களுக்கு  குறைந்தபட்சம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது குடமுழுக்கு விழா  நடத்த வேண்டும் என்பது ஐதீகமாக உள்ளது. அவ்வாறு குடமுழுக்கு விழா செய்வது மூலம் உள்ளிருக்கும்  கடவுளின் சிலைக்கு தெய்வத்தன்மை புதுப்பிக்கப்படுவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. குடமுழுக்கு விழாவானது புனித கலசத்தில் பல்வேறு, ஆறுகளின் புனித நீரை நிரப்பி மந்திரங்களால் தெய்வத்தன்மை, ஏற்பட்ட நீரினால் சிலைகளுக்கும் கோபுரத்தின் உச்சியில் கலசத்தங்களுக்கும் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடத்துவார்கள்.





தெய்வ சிலைகளும் கோபுர கலசங்களும் தெய்வத்தன்மை பெறுவதால் கோவிலுக்கு செல்லாமல் கோபுர தரிசனம் மூலமாக கடவுள் அருளைப் பெற முடியும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இதன் அடிப்படையில் தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்ற வார்த்தை வந்ததாகவும், ஒரு கருத்து உள்ளது. மிகவும் முக்கியம் வாய்ந்த விழாவாக குடமுழுக்கு விழா பார்க்கப்படுவதால் மிகச் சிறிய கோயில் என்றால் கூட பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடமுழுக்கு விழாவை காண வருகை புரிவார்கள். இதனால் கோயில்களில் நடைபெறும் பல திருவிழாக்களை காட்டிலும், கும்பாபிஷேக விழா என்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.


கோயில் நகரம் காஞ்சிபுரம்



கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரம் நகர மத்தியில் மஞ்சள் நீர் கால்வாய் கருகில் பல்லவர் மேடு ,  வஉசி தெருவில் அருள்மிகு கற்பக விநாயகர் மற்றும் ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகள் கண்ட இந்த ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கி, கடந்த 20 தினங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது.






ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம்


இதனைத் தொடர்ந்து இவ்விரு ஆலய அஷ்டபந்த மகா கும்பாபிஷேகம் நடத்த நிர்வாக குழுவால் தீர்மானிக்கப்பட்டு கிடந்த சனிக்கிழமை மாலை கணபதி ஓமத்துடன் யாகசாலை பூஜைகள்  துவங்கியது. இதனைத் தொடர்ந்து நான்காம் கால பூஜை காலை 7 மணிக்கு துவங்கி மஹா பூர்ணாஹீதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விமானம் கன்னி அம்மன் விநாயகர் உள்ளிட்டோருக்கான கலசங்கள் மேள தாள புறப்பாடுடன்  சிவாச்சாரியார்களால் நடத்தப்பட்டது.






மகா கும்பாபிஷேகம் விழா கோலாகலம்


இதனைத்தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் மூலவர் விநாயகர், கன்னியப்பன், விமானம் உள்ளிட்ட அனைத்து பரிவார தேவதைகளுக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகா கும்பாபிஷேக விழாவை கண்டு புனித நீர் தெளித்துக் கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். இவ்விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது. இன்று மாலை 6 மணி அளவில் விசேஷ அலங்காரத்தில் ஊஞ்சல் சேவை நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், மகா கும்பாபிஷேகத்திற்கான குவிந்திருந்தனர்.