ஜோதிடத்தை பொறுத்தவரையில் ஒருவரின் வாழ்வில் மாற்றத்தை தரும் முக்கிய பகவானாக குரு பகவான் உள்ளார். குரு பகவானின் பார்வை பட்டால் செல்வ ரீதியாகவும், செல்வாக்கு ரீதியாகவும் வாழ்வில் மாற்றம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். இதன் காரணமாகவே, குரு பெயர்ச்சியன்று மக்கள் கோயில்களில் தட்சிணாமூர்த்தியை வழிபட குவிந்து வருகின்றனர். நடப்பாண்டிற்கான குரு பெயர்ச்சி வரும் மே 1ம் தேதி நடக்கிறது. இதனால்தான் ஜோதிடத்தில் குரு பார்க்க கோடி நன்மை என்று கூறப்படுகிறது. இதற்கு பின்னால் உள்ள கதை என்னவென்று பார்க்கலாம்?


குருவிடம் ஜோதிடம் கற்ற சந்திரன்:


ஜோதிட சாஸ்திரத்தின் குருவான பிரகஸ்பதியிடம் சந்திர பகவான் தெய்வீக தன்மைகள், சாஸ்திரங்கள் பற்றி கற்றுக்கொள்வதற்காக மாணவனாக சேர்ந்துள்ளார். குரு பகவானும் தனக்கு தெரிந்த அனைத்து ஜோதிட கலைகளையும் சந்திரனுக்கு கற்றுக்கொடுத்துள்ளார்.


தனது குருவான குரு பகவானிடம் அனைத்து சாஸ்திரங்களையும் கற்றுக்கொண்ட சந்திரனுக்கு தான் என்ற ஆணவம் எட்டிப்பார்க்கத் தொடங்கியது. இதையறிந்த குரு பகவான் அவரது ஆவணத்தை அடக்க முடிவு செய்தார்.


குரு பார்வை:


இதனால், பூமியில் புதியதாக பிறந்த குழந்தைக்கு ஜாதகம் ஒன்றை கணிக்கும்படி சந்திர பகவானுக்கு கூறியுள்ளார். சந்திர பகவானும் தான் கற்றுக்கொண்டதன் அடிப்படையில் அந்த குழந்தையின் ஜாதகத்தை கணித்துள்ளார். அதில், அந்த குழந்தை ஒரு வயது வரை மட்டுமே உயிருடன் இருக்கும் என்றும், ஒரு வயது பூர்த்தியடையும்போது பாம்பு கடித்து உயிரை விடும் என்றும் கணித்து எழுதியுள்ளார்.


இதையடுத்து, சரியாக அந்த குழந்தையின் முதல் வயது பூர்த்தியடையும்போது என்ன நடக்கிறது? என்பதை பார்க்க குரு பகவானும், சந்திரனும் விண்ணுலகில் இருந்து பார்த்தனர். அப்போது, சந்திரன் கணித்தது போலவே அந்த குழந்தையின் ஒரு வயது பூர்த்தியடைய சில நிமிடங்களே இருந்த சூழலில், அந்த குழந்தை படுத்திருந்த தொட்டியின் மீது பாம்பு ஒன்று வந்தது.


தவறிய கணிப்பு:


இதைக்கண்ட சந்திரனுக்கு தான் கணித்தது போலவே நடக்கிறது என்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. குரு பகவானும் இதை பார்த்துக் கொண்டிருந்தார். தொட்டிலில் இருந்த குழந்தை தன்னை நோக்கி வரும் பாம்பை ஒரு விளையாட்டு பொருளாக நினைத்து துள்ளிக்குதித்தது. இதனால், தொட்டில் ஆடியது. அப்போது பாம்பின் தலை தொட்டிலின் சங்கிலியில் சிக்கிக் கொண்டது. சங்கிலியில் சிக்கிக் கொண்ட பாம்பு அதிலிருந்து தப்பிக்க தனது உடலை முன்னும், பின்னும் அசைத்தது.


இதைப்பார்த்த குழந்தை இன்னும் உற்சாகமாக தொட்டிலில் துள்ளிக்குதித்தது. இதனால், பாம்பின் வால் உள்பட பின்பகுதியும் தொட்டிலில் மறுமுனை சங்கிலியில் சிக்கிக்கொண்டது. குழந்தை துள்ளிக்குதிக்கவும், தொட்டில் சங்கிலி இறுகவும் பாம்பு உடல் நசுங்கி உயிரிழந்தது.


இதைக்கண்ட சந்திரன் அதிர்ச்சியில் உறைந்தான். சந்திரனின் கணிப்புப்படி, பாம்பு கடித்து குழந்தையே உயிரிழக்க வேண்டும். ஆனால், சங்கிலியில் சிக்கி பாம்பு உயிரிழந்தது. இதனால், தன்னுடைய கணிப்பை சந்திரன் சரிபார்க்கத் தொடங்கினான். சந்திரனின் கணிப்பு மிகச்சரியாகவே இருந்தது.


குரு பார்க்க கோடி நன்மை:


இதையடுத்து, குரு பகவானிடம் தனது கணிப்பில் எந்த தவறும் இல்லையே? பின் எப்படி குழந்தை உயிர் பிழைத்தது? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த குரு பகவான் உனது கணிப்பில் தவறு இல்லை. ஆனால், குரு பகவானாகிய எனது பார்வை இருந்ததால் குழந்தை உயிர் பிழைத்தது என்று விளக்கம் அளித்தார்.


மேலும், சந்திரனிடம் உனது ஜாதக கணிப்பு தவறு இல்லை என்றும், அதனால் உனக்கு வந்த ஆணவமே தவறு என்று கூறியுள்ளார். தலைக்கணம் நீங்கிய சந்திரன், குரு பார்வையின் மகிமையையும் புரிந்து கொண்டார். இதன் காரணமாகவே குரு பார்க்க கோடி நன்மை என்று உண்டாகியதாக புராணங்கள் கூறுகிறது.


மேலும், இதன் மூலம் எப்போதும் ஒரு சீடன் தனது குருவிடம் அகங்காரமாகவும், ஆணவத்துடனும் நடந்து கொள்ளக்கூடாது என்பதையும் இது உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது.