தமிழ்நாடு முழுவதும் வரும் 12-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், மக்கள் புத்தாடைகள் வாங்குவதும்ல பட்டாசுகள் வாங்குவதும் என மும்முரமாக உள்ளனர். தமிழ்நாட்டில் பொங்கலுக்கு நிகராக கொண்டாடப்படும் ஒரே பண்டிகை தீபாவளி என்பதால், வெளியூர்களில் வேலைக்காகவும், படிப்புக்காகவும் சென்றுள்ளவர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புவது வழக்கம்.


தீபாவளி பண்டிகை:


கோடிக்கணக்கான மக்கள் கொண்டாடும் தீபாவளி பண்டிகை நரகாசுரனை வதம் செய்ததற்காக கொண்டாடப்படுகிறது என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால், நரகாசுரனை அவனது தாயே வதம் செய்ததும், தாயே நரகாசுரனை ஏன் வதம் செய்தார்? என்பதும் நம்மில் பலருக்கும் தெரியாது. அது ஏன்? என்பதை புராண கதைகளில் கூறியிருப்பதை சுருக்கமாக கீழே காணலாம்.


நரகாசுரனின் தந்தை வராகன். அவனது தாய் பூமாதேவி. நரகாசுரன் மண்ணுலகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த அரக்கனாக இருந்தான். அவன் வானாசுரனுடன் சேர்ந்து மக்களை கொடுமைப்படுத்தி வந்தான். மண்ணுலகம் எங்கும் அவன் ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தபோது, அவனுக்கு மண்ணுலகத்தை தாண்டி விண்ணுலகத்தையும் ஆட்சி செய்ய வேண்டும் என்ற ஆசை பிறந்தது.


வரம் வாங்கிய நரகாசுரன்:


அப்போது, அவர் தன்னுடைய அமைச்சரவையை கூட்டி ஆலோசனை மேற்கொண்டார். அவரது அமைச்சர்களில் ஒருவர் விண்ணுலகத்தை ஆள வேண்டும் என்றால், தேவர்களை போல சாகா வரம் இருக்க பெற்றிருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளார். இதையடுத்து, அந்த அமைச்சரின் ஆலோசனையை ஏற்று படைக்கும் கடவுளான பிரம்ம தேவனை நோக்கி நரகாசுரன் தவமிருந்தான். அவனது கடும் தவத்தைக் கண்டு பிரம்மா அவனிடம் என்ன வரம் வேண்டுமோ? கேள் என்றார்.


அதற்கு நரகாசுரன் தனக்கு சாகாவரம் வேண்டும் என்றான். அதற்கு பிரம்மா பூமியில் பிறந்த ஒரு உயிர் கண்டிப்பாக ஒரு நாள் சாக வேண்டும் என்றார். எனவே, வேறு வரம் கேள் என்றார். உடனடியாக நரகாசுரன் தனக்கு தன் தாயால் மட்டுமே மரணம் நிகழ வேண்டும் என்ற வரம் கேட்டார். அதற்கு பிரம்மா நரகாசுரனுக்கு அந்த வரத்தை அளித்தார்.


தேவலோகம் கதறல்:


தன் தாயே தன்னை எப்படி அழிப்பாள்? என்பதால் அப்படி ஒரு வரத்தை வாங்கிய நரகாசுரன் தேவலோகத்திற்கு சென்று தேவர்களை வதம் செய்யத் தொடங்கினான். தேவர்களை கைது செய்ததோடு, தேவலோகத்தின் அரசன் இந்திரனின் தாய் அதிதியின் காதணியையும் பறித்து அநீதிக்கு மேல் அநீதி இழைத்துக் கொண்டிருந்தார்.


நரகாசுரனிடம் இருந்து தப்பிச்சென்ற இந்திரன் மகாவிஷ்ணுவிடம் சென்று தங்களை காக்குமாறு வேண்டினான். அப்போது, தான் பூமியில் தற்போது கிருஷ்ண அவதாரம் எடுத்திருப்பதால் அங்கு சென்று தன்னிடம் முறையிடுமாறு இந்திரனிடம் மகாவிஷ்ணு கூறினார். இந்திரன் கூறியதை கேட்ட கிருஷ்ணர் நரகாசுரனை தான் அளிப்பதாக வாக்குறுதி அளித்தார்.


பின்னர், தன் திருவிளையாடலை தொடங்கினார் கிருஷ்ணர். நரகாசுரனை வதம் செய்ய அவனுடன் போருக்குச் சென்றார் கிருஷ்ணர். கிருஷ்ணருடன் அவரது மனைவி சத்யபாமாவும் சென்றார். போரின் போது நரகாசுரனின் சேனையை வதம் செய்தார் கிருஷ்ணர். அப்போது, நரகாசுரனின் சேனை தாக்கியதில் கிருஷ்ணர் காயமடைந்தார்.


அழிந்தது எப்படி?


தன் கணவர் காயமடைந்ததை கண்டு கொந்தளித்த சத்யபாமா நரகாசுரன் மீது அம்புகளை தொடுத்தார். அப்போது, சத்தியபாமா தொடுத்த அம்புகள் தாக்கியதில் நரகாசுரன் கீழே விழுந்து மடிந்தான். அப்போது, காயமடைந்தது போல அவ்வளவு நேரம் நடித்துக் கொண்டிருந்த கிருஷ்ணர் எழுந்தார். பூமாதேவியின் மற்றொரு அவதாரம்தான் கிருஷ்ணரின் மனைவியான சத்தியபாமா அப்போதுதான் புரிந்தது. பூமாதேவியின் மற்றொரு அவதாரமான சத்தியபாமா தாக்கியதில் நரகாசுரன் அழிக்கப்பட்டான். இவ்வாறு புராணங்களில் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நரகாசுரன் அழிக்கப்பட்ட தினத்தை மக்கள் தீபாவளியாக கொண்டாடி வருகிறோம்.