காசிக்கு அடுத்தபடியாக காலபைரவருக்கு என தனிக்கோயில் தருமபுரி அடுத்த அதியமான்கோட்டையில் தட்ஷ்ண காசி காலபைரவர் கோயில் அமைந்துள்ளது. காசிக்கு செல்ல முடியாதவர்கள் அதியமான்கோட்டையில் உள்ள பைரவர் கோயிலில் வந்து பிரார்த்தனை செய்வது வழக்கம். தேய்ப்பிறை நாட்களில் இந்த கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். 1200 ஆண்டுகள் பழமையான கோயில் என்பதால் தமிழகம் மட்டும் அல்.லாமல் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் தேய்பிறை அஷ்டமி நாட்களில் வந்து தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என காலபைரவருக்கு வெள்ளை பூசணிக்காயில் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம்.



 

இன்று காலபைரவர் ஜெயந்தியையெட்டி காலை முதல் பைரவருக்கு பல்வேறு யாகங்களும், 64 வகையான அபிேஷகங்களும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பைரவர் ருத்ராட்சி பந்தலில் அமர்ந்து கொண்டு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் பைரவருக்கு 18 குருக்கள்களை கொண்டு 1 லட்சத்து 8 இலட்சார்ச்சனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று இரவு ஆயிரத்து 8 கிலோ மிளகாய் மற்றும் 108 கிலோ மிளகு கொண்டு சத்துரு சம்பாஹார யாகம் விடியற்காலை நாய் வாகனத்தில் பைரவர் திருவீதி உலா மற்றும் இதனை தொடர்ந்து பைரவருக்கு ஆயிரத்து 8 லிட்டர் பால் அபிேஷகம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள தமிழகம் மட்டும் அல்லாமல் அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்திலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கோயிலை 18 முறை வலம் வந்து,  வெள்ளை பூசணியில் தீபம் ஏற்றி நீண்ட வரிசையில் நின்று பைரவரை தரிசனம் செய்தனர். மேலும் தோஷங்கள் நீங்க வில்வமாலையும், திருமணம் தடை நீங்க மஞ்சள் மாலையும், கோர்ட்டு வழக்குகளிலிருந்து விடுபெறவும் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு தேங்காய் மாலையும், மாணவர்கள் நன்கு படிக்க கொண்டை கடலையில் மலையும், குழந்தை பாக்கியம் கிட்ட முந்திரி மாலையும், அணிவித்தும் பில்லி, சூனியம் விலக மிளகாய் யாகங்களும் செய்யப்பட்டது. மேலும் கால பைரவர் ஜெயந்தியை என்பதால், பக்தர் கூட்டம் அலைமோதியது. இதனால் அசம்பாவிதங்களை தடுக்க, அதியமானகோட்டை காவல் ஆய்வாளர் தலைமையில்,  உதவி காவல் ஆய்வாளர்கள், காவலர்கள், ஊர் காவல் படையினர் என 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பெண் காவலர்கள் மாற்று உடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.