புகழூர் நானபரப்பு அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவில் குழந்தைகளை தோளில் சுமந்தவாறு ஆயிரக்கணக்கான பக்தர்கள் உச்சி வெயிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.





கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சிக்குட்பட்ட நானப்பரப்பு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாதம் திருவிழாவை ஒட்டி ஆலயத்தில் காப்பு கட்டுதலை தொடர்ந்து 15 நாள் திருவிழா நடைபெற்று வருகிறது. 


இந்நிலையில் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி (பூக்குழி) திருவிழாவை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் உற்சவர் ஸ்ரீ மாரியம்மனை மேளதாளங்கள் முழங்க தோளில் சுமந்தவாறு ஆட்டம் பாட்டத்துடன் கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து கோவில் பூசாரி சாமி ஆடியபடி பூமிதி திருவிழாவை தொடங்கி வைத்த பிறகு ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் வெள்ளை உடை அணிந்து ஓம் சக்தி பராசக்தி என்ற கோசத்துடன் தீமிதி (பூக்குழி) திருவிழாவில் பங்கேற்றனர்.




 நீண்ட நாட்களாக குழந்தை வரம் வேண்டி குழந்தை பெற்ற ஆண் மற்றும் பெண் பக்தர்கள் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்தவாறு தீமிதி திருவிழாவில் பங்கேற்ற காட்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.




திருவிழாவை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானமும், நீர்மோர், கம்மங்கூழ் உள்ளிட்ட பிரசாதமும் வழங்கப்பட்டது. இரவு கலை நிகழ்ச்சிகளுடன், நாளை ஸ்ரீ மாரியம்மன் கரகம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. திருவிழாவிற்காக சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல் வேலாயுதம்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூரில் 107 டிகிரி பாரம்ஹீட் வெயில் தாக்கம் உள்ள நிலையில் 12.00 மணியளவில் கடும் உச்சி வெயிலிலும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.