கரூர் அருள்மிகு ஸ்ரீ புதுவாங்கலம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தீர்த்த குடம் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.


 




 



கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாங்கல் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புதுவாங்கலம்மன் திருக்கோவில் சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த கோயில் ஆகும்.


இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்று 14 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 26.01.2023 அன்று கும்பாபிஷேக விழா நடைபெற உள்ள நிலையில் கோவிலில் புனரமைப்பு  பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு  கும்பாபிஷேகத்திற்கு தீர்த்த குடம் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். கரூர் நகரப் பகுதியில் இருந்து வாங்கல் பகுதியில் அமைந்துள்ள புது காளியம்மன் கோவில் வரை தீர்த்த குடம் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.


 




 


இந்த நிகழ்ச்சியில் பாஜக கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் மற்றும் பாஜக நிர்வாகிகள் பொதுமக்கள் என 2,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தீர்த்த குடம் எடுத்துச் சென்றனர்.


 




 


இந்நிகழ்ச்சியில் புனித தீர்த்த குதிரை காவடி, யானை மேல் காவடி, மயிலாட்டம் ஒயிலாட்டம் என ஆட்டம் பாட்டத்துடன் தீர்த்த காவடியை எடுத்துச் சென்றனர்.




கரூர் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


கரூர், செங்குந்தபுரம் பகுதியில்  அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு ஆலயத்தின் சிவாச்சாரியார் பிரத்யேகமாக யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, யாகசாலையில் பக்தர்கள் வழங்கிய பல்வேறு பொருட்களால் சிறப்பு யாகம் நடைபெற்றது.  பின்னர் மேளதாளங்கள் முழங்க பூஜிக்கப்பட்ட கலசத்திற்கு மகா தீபாராதனை காட்டப்பட்ட பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் காவிரி ஆற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தத்தை தலையில் சுமந்தவாறு,  நான்கு கால பூஜைகள் யாக வேள்விகள் செய்து பூஜிக்கப்பட்ட கும்பத்திற்கு புனித தீர்த்தத்தை ஊற்றினார். தொடர்ந்து கும்பத்திற்கு சந்தனப் பொட்டிட்டு பட்டாடை உடுத்தி வண்ண மாலை அணிவித்த பிறகு மகா தீபாராதனையும் காட்டப்பட்டு பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது,
இதில் கரூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


அம்மன் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு.


கரூர் மாவட்டம், திருக்காடுதுறையில் மாதேஸ்வரி அம்பிகை கோவிலில் தை மாத முன்னிட்டு சாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட தீபாரதனை காட்டப்பட்டது. பாளையம், திருக்காடுதுறை, குன்னம், உப்பி பாளையம், கரியாம்பட்டி, சேமங்கி மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.