மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் ( melmaruvathur adhiparasakthi siddhar peedam )


தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலும் ஒன்று. இந்த கோயிலில் தலைமை ஆன்மீகவாதியாக இருந்தவர் பங்காரு அடிகளார். பக்தர்களும் இவரை பின்பற்றுபவர்களும் அன்புடன் ’அம்மா’ என்றே அழைத்து வந்தனர். இந்த கோயிலுக்கு வருபவர்கள் கட்டாயம் இவரிடம் ஆசி பெற்றுச் செல்வார்கள். ஆதிபராசக்தி கோயிலுக்கு தமிழ்நாடு மட்டும் இல்லாது அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடக மற்றும் ஆந்திராவில் இருந்தும் பகதர்கள் பரவலாக வருவார்கள். இந்த கோயிலுக்கு பொதுவாகவே பெண் பக்தர்கள் அதிகம். இங்கு வந்து வழிபட்டால் இன்னல்கள் நீங்கி, நன்மைகள் நடக்கும் என்பது பகதர்களின் நம்பிக்கையாக உள்ளது.



பங்காரு அடிகளார் ( bangaru adigalar )


செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே முன்னாள் ஆசிரியர் பங்காரு அடிகளார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை கடந்த 1966ஆம் ஆண்டு துவக்கினார். மெல்ல மெல்ல இந்த ஆலயம் பல்வேறு நாடுகளை சேர்ந்த பக்தர்ளை ஒருங்கிணைந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றம் என துவக்கபட்டது.




தைப்பூசம் நாட்களில் 48 நாட்கள் சிறப்பு பூஜை மேற்கொண்டு அதனைத் தொடர்ந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பங்காரு அடிகளார் பக்தர்களுக்கு அளிப்பது வழக்கம். கோயிலுக்குள் பெண்கள் செல்லக்கூடாது என்ற நிலை இருந்து வந்த நிலையில் பெண்களை கருவறைக்கு நேரடியாக சென்று அபிஷேகம் செய்யலாமென்று ஆன்மீகப் புரட்சியை ஏற்படுத்தியவர்.


 


பங்காரு அடிகளாரின் ஜீவசமாதி 


மாதவிடாய் நாட்களில் கூட பெண்கள் கருவறைக்கு செல்லலாம் என வழிபாட்டுத் தலங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர் பங்காரு அடிகளார். தமிழ்நாடு மட்டுமல்லாது, 12 மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் சித்தர் பீடத்திற்கு பக்தர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி உடல்நலக் குறைவால் பங்காரு அடிகளார், உலகை விட்டு மறைந்தார். அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர், அவரது பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தற்பொழுது பங்காரு அடிகளாரின் ஜீவசமாதி கோயில் கருவறை அருகே அருள்திரு பங்காரு அம்மா குரு மண்டபத்தில், கட்டப்பட்டுள்ளது.


 படையெடுத்த அரசியல் தலைவர்கள்


பங்காரு அடிகளாரின் மறைவை தொடர்ந்து அவரது, பூத உடலுக்கு ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும்  ஆன்மீக குருக்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். இந்தநிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக அவரது ஜீவ சமாதியிலும்  அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று பங்காரு அடிகளார்  உயிரிழந்த 11 வது நாள் நினைவு நாள் துக்க அனுசரிப்பு நடைபெற்றது. இதனால் இன்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது மனைவி சௌமியா அன்புமணி ஆகியோர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம்  வருகை புரிந்தனர்.




பங்காரு அடிகளார் இல்லத்திற்கு சென்று,  பங்காரு அடிகளாரின் மனைவி  லட்சுமி மற்றும் அவரது உறவினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்பு அடிகளாரின் ஜீவா சமாதிக்கு சென்று,  மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும்  தீபாரதனை  காட்டி பக்தி பரவசத்துடன்  பங்காரு அடிகளார் ஜீவசமாதியில் வழிபாடு  மேற்கொண்டார்.  இதனைத் தொடர்ந்து ஆதிபராசக்தியை வணங்கி, தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொண்டார்.