உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் இரண்டு திருவிழாக்கள் நடைபெறும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சனமும் இக்கோயிலில் வெகு விமரிசையாக நடைபெறும். மூலவரான நடராஜர் உற்சவரராக பக்தர்களுக்கு காட்சியளிக்கும் இந்த திருவிழாக்களுக்கான உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான சிவ பக்தர்கள் குவிவார்கள்.

 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் கடந்த 28ஆம் தேதி  துவங்கியது. நாள்தோறும் தொடர்ந்து பஞ்சமுக மூர்த்திகள் வீதி உலா பல்வேறு வாகனங்களில் தினமும் நடைபெற்று வந்த நிலையில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் தற்போது தொடங்கியுள்ளது. மாட வீதிகளின் வழியே வீதி உலா வரும் தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

 



 

பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், நடராஜர், சிவகாமசுந்தரி சண்டிகேஸ்வரர் என தனி தனி தேர்களில் எழுந்ததருளி அருள் பாலிக்கிறார். சிதம்பரத்தில் லேசாக மழை பெய்து வரும் நிலையில் குடைபிடித்தபடி பக்தர்கள் பஞ்ச மூர்த்திகளை தரிசனம் செய்து வருகின்றனர்.

 

முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் நாளை மாலை நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. ஆருத்ரா தரிசன விழாவை ஒட்டி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தை ஓட்டி விழாக்கோலம் கொண்ட சிதம்பரம் மாட வீதிகள். பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வரும் சாலைகளில் பெண்கள் கோலமிட்டும், சிவனடியார்கள் திருவாசகம் பாடியும் நடனமாடியும் நடராஜரை தரிசனம் செய்தனர்

 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்ததால் கூடுதல் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் நடராஜர் கோயில் மற்றும் மாடவிதிகளில் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.