காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்சம் அருளும் ஆடி மாத கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவிந்தா கோவிந்தா கோஷமிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டனர்.


ஆடி மாதம் - கருட சேவை


108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான,உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம்,ஆனி மாதம், ஆடி மாதம், என  மூன்று கருட சேவை உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம்.


அந்த வகையில், பெருமாளை வணங்குவதற்காக குளத்திலிருந்து தாமரைப் பூவை பறித்த யானையான கஜேந்திரனின் காலை, முதலை பற்றிக் கொண்ட நிலையில், கஜேந்திரன் அலறியபடி பெருமாளை அழைக்க, பெருமாள் கருட வாகனத்தில் காட்சியளித்து முதலையை அழித்து கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்தார் என நம்பப்படுகிறது


கஜேந்திர மோட்சம்


அதனை குறிக்கும் வகையில் கஜேந்திர மோட்சம் அருளும் ஆடி மாத கருட சேவை உற்சவம் இன்று வரதராஜ பெருமாள் கோவிலில் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆடி மாத கருட சேவை உற்சவத்தை ஒட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மஞ்சள் நிற பட்டு உடுத்தி, செண்பகப்பூ, மனோரஞ்சித பூ, மல்லிகைப்பூ, பஞ்சவர்ண பூ மலர் மாலைகள், திருவாபரணங்கள் அணிவித்து, மஞ்சள் பட்டுடுத்தி தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.




தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் அனந்த சரஸ் திருக்குளத்தின் அருகே எழுந்தருளியதை தொடர்ந்து  கஜேந்திர மோட்சம் அருளும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் மேள, தாள வாத்தியங்கள் முழங்க, வேதபாராயண கோஷ்டியினர் மற்றும் பஜனை கோஷ்டிகள் பாடிவர கோவிலில் ஆழ்வார் பிரகாரத்தில் உலா வந்து கோபுர தரிசனம் தந்தார்.


கோவிந்தா கோவிந்தா 


பின்னர்  நான்கு மாட வீதிகளிலும் தங்க கருட வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தங்க கருட வாகனத்தில் வலம் வந்த வரதராஜ பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு கற்பூர ஆரத்தி கொடுத்து பெருமாளை தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.