ஆனி மாதம் வந்தாலே நம் அனைவருக்கும் பலவிதமான ஆன்மிக நிகழ்வுகள் நினைவுக்கு வரும். அதில் மிக முக்கியமானது ஆனி திருமஞ்சனம்(Aani Thirumanjanam). நடராஜருக்கு உகந்த இந்த ஆனி திருமஞ்சனம் 2026ம் ஆண்டு எப்போது என்பது பற்றியும், அதன் வழிபாட்டு முறைகள் பற்றியும் நாம் காணலாம். 

Continues below advertisement

நடராஜருக்கான ஆனி திருமஞ்சனம்

சிவ ஆலயங்களில் நடராஜருக்கு என தனி சன்னதி அமைக்கப்பட்டிருக்கும். இந்த நடராஜருக்கு சித்திரை திருவோணம், மாசி சதுர்த்தசி, ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி ஆகிய விசேஷ நாட்களில் மாலை நேரத்தில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் ஆண்டுக்கு 2 நாட்கள் மட்டும் அதிகாலை நேரத்தில் அபிஷேகமும், சிறப்பு வழிபாடும் நடைபெறும். அவை ஒன்று ஆனி திருமஞ்சனம், மற்றொன்று மார்கழி திருவாதிரை ஆகும். 

ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளில் இந்த நிகழ்வானது நடைபெறுகிறது. திருமஞ்சனம் என்றால் இறைவனுக்கு செய்யப்படும் மிகப்பெரிய மகா அபிஷேகம் என்பது பொருளாகும். இந்நாளில் பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் போன்ற மங்களக்கரமான பொருட்களை கொண்டு இறைவனுக்கு கோடை வெப்பத்தை தணிக்கும் பொருட்டு இந்த மகா அபிஷேகம் வழிபாட்டு முறை நடைபெறுகிறது.

Continues below advertisement

Also Read: நெல்லையில் அதிசயம்: தமிழகத்தில் மட்டுமே உள்ள 'ஜோதி ஆஞ்சநேயர்' திருக்கோலம்

பின்னணி காரணம்

இந்த நாளில் ஆடலரசனான நடராஜருக்கு தேவர்கள் இணைந்து பூஜைகள் செய்ததாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. நடராஜருக்கான ஆலயமாக கருதப்படும் சிதம்பரத்தில் இந்த ஆனி திருமஞ்சன விழாவானது 10 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆனி திருமஞ்சன நாளுக்கு முதல் நாள் சிதம்பரத்தில் திருத்தேரோட்டம் நடைபெறும். இதே நாளில் தான் இந்த ஆனி திருமஞ்சன நிகழ்வானது சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் வெகுவிமரிசையாக நடைபெறும். ஈசனை தேவர்கள் வழிபடும் காலம் என்பதால் அதிகாலையில் இந்த சிறப்பு அபிஷேகமானது நடத்தப்படுகிறது. 

2026 ஆனி திருமஞ்சனம் எப்போது?

2026ம் ஆண்டு ஆனி திருமஞ்சனமானது வரும் ஜூன் 22ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இன்றைய நாளில் நாம் அதிகாலையில் நடைபெறும் நடராஜருக்கான சிறப்பு அபிஷேகத்தை வழிபட்டால் வாழ்வில் இதுவரை பட்ட துன்பங்கள் எல்லாம் பறந்து போய் செல்வம் மட்டுமல்லாமல் இன்பமும் பெருகும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.மேலும் இப்பிறவியில் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி சகலவிதமான நன்மைகளும் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. ஜூன் 21ம் தேதி மதியம் 3.16 முதல் ஜூன் 22ம் தேதி மதியம் 3..35 வரை உத்திரம் நட்சத்திரம் உள்ளது. சூரிய உதயம்படி கணக்கிட்டால் ஜூன் 22ம் தேதி அதிகாலை தான் நடராஜ பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். 

ஆனி திருமஞ்சனத்திற்கு முதல் நாள் உத்திரம் நட்சத்திரம் வருகிறது. அன்றைய நாளும் நடராஜருக்கு மிகவும் உகந்த நாளாகும். கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் இந்நாளில் வீட்டில் வழிபாடு செய்து பலன்களைப் பெறலாம்.