ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு தமிழகத்தின் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான சுமார் 800 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த அருள்மிகு வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலில் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.




 அருள்மிகு கெளமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வழிபாடு


தேனி - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அருள்மிகு வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோவில். சுமார் 800 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆடி பதினெட்டாம் பெருக்கு முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.


கோவில் அருகில் உள்ள முல்லைப் பெரியாற்றங்கரையில் ஏராளமான பெண்கள் இன்று 18ஆம் பெருக்கை முன்னிட்டு தாங்கள் கழுத்தில் அணிந்திருந்த பழைய தாலி கயிறுகளை மாற்றி பூஜை செய்து வழிபட்டு புதிதாக வழங்கப்பட்ட தாலிக்கயிறுகளை மாற்றி அம்மனை வேண்டி வழிபட்டனர். அருகில் உள்ள சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் கயிறு குங்குமம் போன்றவற்றை வழங்கினர். அதனை தொடர்ந்து சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து வீரபாண்டி கௌமாரியம்மனையும் கண்ணீஸ் வரமுடையாரையும் வணங்கி வழிபட்டனர். இதில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.




 அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் வழிபாடு


இதேபோல் பெரியகுளம் அருகே மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலில் ஆடி 18 முன்னிட்டு பக்தர்கள் பொங்கல் வைத்து, மொட்டை அடித்து,  குழந்தைகளுக்கு காதுகுத்தி  குலதெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு சாமி தரிசனம் செய்த பக்தர்கள்.


பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இயற்கை சூழலில் இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் எனும் கோவில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக மிகவும் சிறப்பு வாய்ந்த 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இத்திருக் கோவிலில் குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் இந்த கோவிலை குலதெய்வமாக வழிபடுவது ஐதீகம். அதே போன்று அடைத்த கதவுக்கே இந்த கோவிலில் பூஜைகள் நடைபெற்று வருகின்றது. 




நேர்த்திக்கடன்


இந்நிலையில் இன்று ஆடி 18 முன்னிட்டு  கோவிலில் காமாட்சி அம்மனுக்கு பழங்கள் மற்றும் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. மேலும் குலதெய்வ வழிபாட்டிற்காக  அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.  கோவிலுக்கு வந்த பக்தர்கள்  கோவிலில் பொங்கல் வைத்தும், குழந்தைகளுக்கு மொட்டை அடித்தும், குழந்தைகளுக்கு காது குத்தி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வழிபாட்டில் ஈடுபட்டு சாமி தரிசனம் செய்தனர்.




சுருளி அருவி


இதேபோல் மிகவும் பிரசித்திபெற்ற ஆன்மீக ஸ்தலமாகவும் சுற்றுலா தலமாகவும் விளங்கும் சுருளி அருவி செல்லும் சாலையில் உள்ள முல்லை பெரியாற்று கரையோரங்களில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி , தர்ப்பணம் செய்தனர். சுருளி அருவி பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் அருவியில் குளிக்க செல்ல தடை விதிக்கப்பட்டதால் வழிபாட்டுக்கு வந்த பக்தர்கள் முல்லை பெரியாற்றில் நீராடிவிட்டு சுருளி அருவி செல்லும் வழியில் உள்ள பூத நாராயணன் கோவிலில் வழிபாடு செய்தனர்.