விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த முருக்கேரியில் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முருக்கேரியில் உள்ள வேங்கடத்தம்மன், மாரியம்மன், நாகாத்தம்மன் கோவில் திருவிழா, கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 04ம் தேதி காலை நாகாத்தம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து பூங்கரகம் வீதியுலாவும், கூழ்வார்த்தலும் நடந்தது. இன்று காலை 8:00 மணிக்கு வேங்கடத்தம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், 9:00 மணிக்கு திருத்தேர் இழுத்தலும் நடந்தது. பக்தர்கள் வேல், அலகு, செடல் குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின், பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை 6 மணி அளவில் பக்தர்கள் தீ மிதித்தனர், பூ அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் தேர் திருவிழாவை காண முறுக்கேரி சுற்றுவட்டாரம் கிராமத்திலிருந்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.


திருமணம் மற்றும் குழந்தை வரம் :


திருமணமாகி பல வருடங்கள் ஆகியும், குழந்தை இல்லாதவர்கள் பலரும், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள முறுக்கேரி கிராமத்தில் இருக்க கூடிய ஸ்ரீ வேங்கடத்தம்மன் அம்மன் ஆலயத்திற்கு வந்து வழிபட்டு சென்ற பின்னர் குழந்தை வரம் பெற்றிருக்கிறார்கள் என பரவலாக நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்த ஆலயத்திற்கு வந்து வேங்கடத்தம்மனை வழிபடுபவர்களுக்கு, உடலில் உள்ள பிரச்சினைகள் நீங்கி, குழந்தை வரம் அம்மனால் வழங்கப்படும் என நம்பப்படுகிறது. இது தவிர, பிரசவத்தில் எந்தவிதமான சிக்கலும் ஏற்படாமல் இருக்க கர்ப்பமாக உள்ள பெண்களும் இங்கு வந்து அம்மனை வழிபடுகின்றனர்.


குழந்தை வரம் வேண்டி இந்த அம்மனை வழிபடவரும் தம்பதியில், பெண் அம்மனை மனமுருகி வேண்டி, இங்கு குழந்தை வரம் வேண்டுவோர் செய்யும் படி பூஜை எனும் சிறப்பு பூஜையைச் செய்து வழிபடவேண்டும். அதன் பின்னர் அம்மனின் சந்நிதியில் வைத்து பூஜிக்கப்பட்ட மஞ்சள் கிழங்கினை உடலில் பூசி வந்தால், குழந்தை பெறுவதில் இருக்கிற தடைகளை நீங்கி, குழந்தை வரம் கிடைக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளனர். இவ்வாறு வழிபட்டு குழந்தை வரத்தினை பெற்றவர்கள், கர்ப்பமாக இருக்கும் போது, மீண்டும் வந்து அம்மனை தரிசித்துவிட்டு, நேர்த்திக் கடனாக தொட்டில், வளையல் போன்ற பொருட்களையும் சமர்பித்து வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.