Poha Idli : இன்ஸ்டண்ட் அவல் இட்லியும் சூப்பர் சட்னியும்..இப்படி செய்து அசத்துங்க!
ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும் 50 கிராம் வேர்க்கடலையை சேர்த்து வறுக்கவும். வேர்க்கடலை கடாயிலேயே இருக்க வேண்டும். இதனுடன் 7 பல் பூண்டு, 8 பச்சை மிளகாய், ஒரு நறுக்கிய மீடியம் சைஸ் வெங்காயம், நறுக்கிய 4 தக்காளி சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 4 நிமிடம் வேக விடவும்.
பின் ஒரு கிண்ணத்தில் ஒரு கப் அளவு ரவை சேர்த்து அதில், அதே கப்பால் 1 கப் அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் ஊற விடவும். அதே கப்பால் ஒரு கப் அளவு அவல் எடுத்து மற்றொறு கிண்ணத்தில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 2 முறை அலசி தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்க.
அவலை அளந்த அதே கப்பால் ஒரு கப் அளவு தயிர் எடுத்து அவலுடன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து விட்டு 5 நிமிடம் ஊற வைக்கவும். அதற்குள் வேர்க்கடலை நன்றாக வெந்து இருக்கும். இப்போது இதனுடன் நறுக்கிய 1 துண்டு இஞ்சி, ஒரு ஸ்பூன் சீரகம், அரை எலுமிச்சைப் பழ அளவு புளி ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இதனுடன் கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு இறக்கி கொள்ளவும்.
இப்போது அவல் நன்றாக ஊறி இருக்கும். இதை மிக்ஸியில் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். அரைத்த இந்த அவல் மாவுடன் ஊற வைத்த ரவையை சேர்த்து, இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்ததும், இட்லி மாவு பதத்திற்கு வந்து விடும். இப்போது இதனுடன் 2 சிட்டிகை சமையல் சோடா சேர்த்து கலக்கவும். இதை இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
இப்போது வேக வைத்த வேர்க்கடலை வெங்காயம் தக்காளி ஆகியவற்றை மிக்சி ஜாரில் சேர்த்து அதில் இருக்கும் சிறிது தண்ணீரையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
இப்போது கடுகு கறிவேப்பிலை தாளித்து சட்னியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் சுவையான இட்லியும் சுவையான சட்னியும் ரெடி.