Rashmika Mandanna : ராஷ்மிகாவின் போலி ஆபாச வீடியோவால் வெடித்த பெரும் சர்ச்சை!
தென்னிந்திய நடிகைகளுள் முக்கிய இடத்தை பிடிப்பவர் ராஷ்மிகா மந்தனா. கிரிக் பார்ட்டி எனும் கன்னட படத்தில் நடித்து சினிமா உலகில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து விஜய் தேவர கொண்டாவுடன் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபலமானார். இருவருக்குமான கெமிஸ்ட்ரி நன்கு வொர்க்-அவுட் ஆனதால், டியர் காம்ரேட் எனும் படத்தில் இவர்கள் மீண்டும் இணைந்து நடித்தனர்.
கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். புஷ்பாவில் ஸ்ரீவள்ளியாகவும் சீதா ராமம் படத்தில் அஃப்ரீனாகவும் வாரிசு படத்தில் திவ்யாவாகவும் நடித்து அசத்தினார்
இதுவரை குட் பாய், மிஷன் மஜ்னு ஆகிய ஹிந்தி படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா ரன்பீர் கபூருடன் அனிமல் எனும் படத்திலும் நடித்துள்ளார் இப்படம் வரும் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. அத்துடன், புஷ்பா 2 படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் அறைகுறை ஆடையுடன் ராஷ்மிகா வலம் வருவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வந்தது. இந்த வீடியோ AI தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்யப்பட்டது என்ற உண்மை உடனுக்குடன் வெளியானது. சாரா படேலின் ஒரிஜினல் வீடியோ, இந்த மோசமான செயலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினைக்கு ராஷ்மிகா மந்தனா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அமிதாப் பச்சன், மிருணாள் தாக்கூர் உள்ளிட்ட பிரபலங்களும் ராஷ்மிகாவிற்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.
போலீயாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு ஏற்கனவே அமலில் இருக்கிறது. நடிகை ராஷ்மிகாவின் டீப் ஃபேக் வீடியோ சர்ச்சையால், மத்திய அரசு இதனை நினைவூட்டியுள்ளது.