HBD Singer Chithra : ‘ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே..’ சின்னக்குயில் சித்ராவின் பிறந்தநாள் இன்று!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்த சித்ரா முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டவர். படிப்பிலும் முதுகலைப் பட்டங்களை பெற்ற அவர், 1978 முதல் 1984 ஆம் ஆண்டு வரை தேசிய அளவில் பல்வேறு துறைகளில் திறமையானவர்களுக்கு மத்திய அரசு வழங்கிய கல்வி உதவித்தொகையை பெற்றவர்.
பிரபல மலையாள இசையமைப்பாளர் எம்.ஜி.ராதாகிருஷ்ணன் தனது படங்களிலும் தனி இசைப் பாடல்களிலும் சித்ராவின் குரல் வளத்தை பயன்படுத்த தொடங்கினார். அங்கு தான் அவரின் பயணமும் ஆரம்பித்தது. 1980 ஆம் ஆண்டு சித்ரா பாடிய மலையாள பட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற கவனிக்கத்தக்க ஒருவராக மாறினார்.
இப்படி ஆண்டுகள் சென்று கொண்டிருக்க மலையாளத்தில் ஃபாசில் இயக்கிய படம் தமிழில் ‘பூவே பூச்சுடவா’ என்ற பெயரில் எடுக்கப்படுகிறது. படத்தின் பாடல்களை கேட்ட இசையமைப்பாளர் இளையராஜா அதில் பாடிய சித்ராவின் குரலால் ஈர்க்கப்பட்டு அவரை தமிழில் அறிமுகம் செய்கிறார். ஆனால் நீதானா அந்தக் குயில் படத்தில் இடம் பெற்ற பூஜைக்கேத்த பூவிது தான் இளையராஜா இசையில் சித்ரா பாடிய முதல் பாடல்.
அதற்குள் பூவே பூச்சுடவா படத்தில் சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா பாடல் வெளியாகி பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. அதில் இடம் பெற்ற சின்னக்குயில் என்ற வார்த்தையே சித்ராவின் அடையாளமாக மாறியது.
ஜென்ஸி, ஜானகி, பி.சுசீலா ஆகியோர் வரிசையில் சித்ரா தனக்கென தனியிடம் பிடித்தார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் - சித்ரா இணை பாடிய பாடல்களை விட, மனோ - சித்ரா இணைந்து பாடிய பாடல்கள் எண்ணிக்கை அதிகம். அப்படி ஒரு குரல் பொருத்தம் இருவருக்குள்ளும் இருந்தது. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி அவரை பாட வைக்காத இசையமைப்பாளர்களே இல்லை என சொல்லலாம்.
சித்ரா தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, வங்கம், ஒரியா, பஞ்சாபி, குஜராத்தி, துளு, ராஜஸ்தானி, உருது என பல மொழிகளில் கிட்டதட்ட 25 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார்.இந்தியாவில் அதிகமுறை தேசிய விருதை வென்ற பாடகி என்ற பெருமைக்கு சொந்தக்காரராக சித்ரா உள்ளார்.
அதேசமயம் பிலிம்ஃபேர், மாநில அரசு விருதுகள் என ஏகப்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். மத்திய அரசின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருக்கிறார். இப்படி எண்ணற்ற மறக்க முடியாத நிகழ்வுகளை கொண்டுள்ள சித்ராவின் பங்களிப்பு, எப்படி குயிலின் குரல் எந்த காலக்கட்டத்திலும் சலிக்காதோ, அதே மாதிரி ரசிகர்களால் மறக்க முடியாது. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சித்ரா..!