Bhavadharini : மறைந்த பாடகி பவதாரிணிக்கு இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்....
இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகி மற்றும் இசையமைப்பாளரான பவதாரிணி, புற்றுநோயால் நேற்று (ஜனவரி 25) காலமானார். திரை பிரபலங்கள் பலரும் அவரின் மறைவுக்கு இரங்கலை தெரிவித்துள்ளனர்.
மனம் பதைக்கிறது. அருமைச் சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாக பற்றிக்கொள்கிறேன். பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று. இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும். பவதாரிணியின் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கல் - நடிகர் கமல்ஹாசன்.
நெஞ்சம் நொறுங்கிவிட்டது. பவதாரிணி ஒரு தெய்வக் குழந்தை. அவருடைய மறைவு இந்த உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரையும் நிலைகுலைய செய்துவிட்டது. தைப்பூச நாளில் அவர் உயிரிழந்த நிலையில் நேரடியாக முருக பெருமானின் காலடியில் போய் சேர்வார். அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும் - நடிகர் வடிவேலு.
பவதாம்மா நீ எனக்கு வெறும் தோழி இல்ல, நீ எனக்கு சகோதரி இல்ல, ஆனால் நீ எனக்கு யார் என்பது உனக்கே தெரியும். நீ இந்த உலகை விட்டு பிரிந்தது என்னை அதிகமாக உலுக்கி இருக்கிறது. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என்னுடைய முதல் பாடலை நீ பாடினாய் உன்னை மீண்டும் சந்திக்கும் வரை சிறு வயதில் நமக்கு இருந்த உறவு என்னை உறுத்திக் கொண்டேயிருக்கும். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை - நடிகை வனிதா விஜயகுமார்.
இது ஒரு சோகமான இழப்பு. மிகவும் திறமையான மற்றும் மென்மையாக பேசும் பவதாரிணி மேடம் எங்களுக்கு பல நினைவுகளை பொக்கிஷமாக விட்டுச் சென்றுள்ளார். ராஜா சார் மற்றும் குடும்பத்தினருக்கு பிரார்த்தனைகள் மற்றும் இரங்கல்கள் - இசையமைப்பாளர் அனிருத்
அப்பாவித்தனம் மற்றும் அன்பால் மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழும் குரல். நீங்கள் ஒரு தூய ஆத்மா. விரைவில் மறைந்துவிட்டீர்கள்! இளையராஜா சார் மற்றும் குடும்பத்திற்கு வலிமை கொடுக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன் - நடிகர் சிம்பு