Actor Suriya : “அவரை பார்த்து பலமுறை பிரமிச்சு போயிருக்கேன்..” கண்ணீர் மல்க விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய சூர்யா!

விஜயகாந்த்துக்கு சூர்யா அஞ்சலி
தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் மறைவின் போது வெளிநாட்டில் இருந்ததால் நடிகர் சிவகுமாரும் அவரின் மகன்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி அஞ்சலி செலுத்த முடியாமல் போனது.
சோஷியல் மீடியா மூலம் அவர்கள் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கலை தெரிவித்திருந்தாலும் நேரில் அஞ்சலி செலுத்த முடியாமல் வருத்தத்தில் இருந்தனர். நடிகர் சூர்யா வீடியோ மூலம் இரங்கலை தெரிவித்து இருந்தார்.
வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பியதும் நேற்று காலை அஞ்சலி செலுத்திய சிவகுமார் மற்றும் கார்த்தியை தொடர்ந்து இன்று காலை விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் நடிகர் சூர்யா. சிறிது நேரம் சமாதியில் மௌனமாக அமர்ந்து இருந்தார்.
நடிகர் சூர்யா சினிமாவில் அறிமுகமாகி நேருக்கு நேர், பூவெல்லாம் கேட்டுப்பார் உள்ளிட்ட சில படங்களில் நடித்து இருந்தாலும், நடிகர் விஜயகாந்துடன் இணைந்து அவர் நடித்த 'பெரியண்ணா' திரைப்படம் சூர்யாவின் திரைப்பயணத்தில் ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது.
பெரியண்ணா படப்பிடிப்பின் போது விஜயகாந்த் தனக்கு சாப்பாடு ஊட்டி விட்டதை பற்றி செய்தியாளர்களிடம் நினைவு கூர்ந்தார். விஜயகாந்தின் எளிமை, துணிச்சல் என அனைத்தையும் பார்த்து பிரமிப்பாக இருந்தது என கூறினார் சூர்யா.
இறுதி அஞ்சலியின் போது அவரின் முகத்தை பார்க்க முடியாமல் போனது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு என தெரிவித்து இருந்தார். அவரின் ஆழ்ந்த இரங்கலை விஜயகாந்த் குடும்பத்தினர், தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு தெரிவித்தார்.