நோய் வந்துவிடுமோ என்ற பயத்தில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக குளிக்காமல் இருந்த உலகின் அழுக்கு மனிதர் ('World's Dirtiest Man' ) என அழைக்கப்பட்ட நபர் ஈரானில் உயிரிழந்தார்.
துவைக்காத உடைகள் , உடலெங்கும் அழுக்கு என தனிமையில் வாழ்ந்து வந்த அமு ஹாஜி என்ற 94 வயது முதியவர் ஈரானின் தெற்கு மாகாணமான ஃபார்ஸில் உள்ள தேஜ்கா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக குளிக்காமல் , சுத்தமே இல்லாமல் தனிமையில் வசித்து வந்த அமு ஹாஜிக்கு குளிப்பது என்றாலே பயம்தான் . காரணம் அவர் குளித்தால் தான் உயிரிழந்துவிடுவதாக நம்பினார். அந்த ஊரில் அவரை சிலர் துறவியாக கருதுகின்றனர். சிலரோ அவர் சிறு வயதில் தண்ணீரால் சில அவமானங்களையும் , உணர்வு அடிப்படையிலான பின்னடைவையும் சந்தித்திருக்கலாம் , அதனால்தான் அவர் தண்ணீர் என்றாலே வெறுத்து ஒதுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என கூறுகின்றனர்.
இந்த நிலையில்தான் சமீபத்தில் உள்ளூர் வாசிகள் சிலர் அங்கிருந்த குளியலறை ஒன்றில் அவரை குளிக்க வைத்திருக்கின்றனர். இந்த சம்பவம் நடந்து சரியாக ஒரு மாதத்தில் ஹாஜி உயிரிழந்துவிட்டார். ஹாஜியின் இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை இரவு ஃபராஷ்பந்த் நகரில், ஃபார்ஸ் பகுதியில் நடைப்பெற்றது. கடந்த 2013 ஆம் ஆண்டு "தி ஸ்ட்ரேஞ்ச் லைஃப் ஆஃப் அமு ஹாஜி" என்ற தலைப்பில் ஹாஜியின் வாழ்க்கை ஆவணப்படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.