உலகமே கொரோனா அச்சத்தில் துடித்துக்கொண்டிருக்க, இஸ்ரேல்-பாலஸ்தீனம் படைகளுக்கு இடையே மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்த இரு படைகளுக்கும் இடையே வான் வழி தாக்குதல் மீண்டும் அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பாக இஸ்ரேல் பகுதியில் ஹமாஸ் படைகள் தாக்குதல் நடத்தியது. அதன்பின்னர் நேற்று காசா பகுதியில் இஸ்ரேல் படைகள் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு இந்தியர் உட்பட 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 


இந்நிலையில் கொரோனா காலத்திலும் ஏன் இந்த இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே தாக்குதல் நடைபெற்று வருகிறது? இதற்கான காரணம் என்ன? பெருந்தொற்றை விட அப்படி என்ன போருக்கு அவசியம்? இதோ இருநாடுகளின் தொடரும் பஞ்சாயத்திற்கான காரணம்.


வரலாற்று பின்னணி:


இந்தியா-பாகிஸ்தான் பிரச்னைக்கு பிறகு உலகில் மிகவும் தீர்க்க முடியாத இருநாட்டு பிரச்னை என்றால் அது இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் தான். இந்தப் பகுதியில்  19ஆவது நூற்றாண்டு முதல் யூதர்களுக்கும் அரபுகளுக்கும் சண்டை இருந்து கொண்டே வந்துள்ளது. இவை 20ஆம் நூற்றாண்டில் மிகவும் தீவிரம் அடைந்தது. குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஐநா சபை உருவான பிறகு 1947ஆம் ஆண்டு இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண ஒரு வழி கூறப்பட்டது. அதன்படி பிரிட்டிஷ் காலனியாக இருந்த  இப்பகுதியை இரண்டாக பிரித்து யூதர்களுக்கு இஸ்ரேல்- அரபு மக்களுக்கு பாலஸ்தீனம் என இருநாடுகளாக பிரிக்க ஐநா சபை யோசனை வழங்கியது. 


எனினும் இதை அரபு மக்கள் ஏற்க மறுத்தனர். இதனைத் தொடர்ந்து 1948ஆம் ஆண்டு அரபு மக்களின் எதிர்ப்பையும் மீறி மே மாதம் இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டது. அப்போது முதல் அரபு-இஸ்ரேல் போர் மூண்டது. இதில் கிட்டதட்ட 7,50,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதன்விளைவாக இந்தப் பகுதி இஸ்ரேல், வேஸ்ட் பாங்க், காசா என மூன்றாக பிரிக்கப்பட்டது. இதில் வேஸ்ட் பாங்க் பகுதி ஜார்டன் நாட்டின் கட்டுப்பாட்டிலும், காசா பகுதி எகிப்து நாட்டின் கட்டுப்பாட்டிலும் இருந்தது. 




இதன்பின்னர் மீண்டும் 1967ஆம் ஆண்டு இஸ்ரேல், ஜார்டன்,சிரீயா, எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே 6 நாள் போர் நடைபெற்றது. இந்தப் போரில் இஸ்ரேல் நாட்டு படைகள் ஜார்டன் இடமிருந்து வேஸ்ட் பாங்க் மற்றும் கிழக்கு ஜெருசலேம் பகுதியையும், எகிப்து இடமிருந்து காசா பகுதியையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. இதன்பின்னரும் ஜெருசலேம் பகுதிக்காகவும் அரபு மக்களை ஏற்றுக் கொள்ளாமலும் இஸ்ரேல் அரசு தொடர்ந்து சண்டையிட்டு வந்தது. 1993ஆம் ஆண்டு ஆஸ்லோ ஒப்பந்தத்தின்படி நீண்ட நாட்கள் சண்டைக்கு பிறகு பாலஸ்தீனியர்கள் காசா பகுதி மற்றும் வேஸ்ட் பாங்க் பகுதியில் வசிக்க இஸ்ரேல் ஒப்புக் கொண்டது.


எனினும் பாலஸ்தீனத்தில் முக்கிய கட்சியான ஹமாஸ் படைக்கும் இஸ்ரேல் படைக்கும் எப்போதும் தாக்குதல் நடைபெற்று வந்தது. 2013ஆம் ஆண்டு இஸ்ரேல்-பாலஸ்தீனம் அமைதி பேச்சு வார்த்தையை மீண்டும் அமெரிக்க முன்னேடுத்தது. அப்போது பாலஸ்தீனத்தில் ஆட்சி செய்து வந்த ஃபாதா கட்சி ஹமாஸ் கட்சியுடன் கூட்டாக ஆட்சியில் அமர்ந்தது. இதனால் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. ஏனென்றால் 1997ஆம் ஆண்டு ஹமாஸ் படைகளை சர்வதேச தீவிரவாத அமைப்பு என்று அமெரிக்க அறிவித்திருந்தது. 




இதன்பின்னர் 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபின்னர் மீண்டும் ஹமாஸ்-இஸ்ரேல் படைகள் இடையே போர் மூண்டது. ஹமாஸ் படைகள் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் நாட்டின் மீது ஏவியது. இதற்கு இஸ்ரேல் படைகளும் காசா பகுதியில் தாக்குதல் நடத்தி தகுந்த பதிலடி கொடுத்தது. இந்தத் தாக்குதலில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹமாஸ் படையின் கொல்லப்பட்டனர். அத்துடன் 4 மாதங்களாக நீடித்த இந்தப் போர் எகிப்து தலையிட்டதால் கடைசியில் முடிவிற்கு வந்தது. அதன்பின்னரும் தொடர்ந்து அவ்வப்போது சிறிய தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்தது. 


காசா தற்போது ஏரிய காரணம் என்ன?


2018ஆம் ஆண்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் செயல்பாடுகள் மீண்டும் இப்பகுதியில் பெரியளவில் பதற்றத்தை ஏற்படுத்தியது. அப்போது டெல் அவிவ் பகுதியில் இருந்த அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேம் பகுதிக்கு மாற்றி உத்தரவிட்டது. ஜெருசலேம் பகுதியை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இருவரும் உரிமை கொண்டாடி வருகின்றனர். 




குறிப்பாக கிழக்கு ஜெருசலேம் பகுதியில் ஒரு பழைமை வாய்ந்த மசூதி உள்ளது. இது இஸ்லாமியர்களின் மூன்றாவது புனித ஸ்தலமாக கருதப்படுகிறது. இதனால் இப்பகுதியை பாலஸ்தீனியர்கள் தங்களுடையது என்று கூறி வருகின்றனர். அதேசமயத்தில் ஜெருசலேம் முழுவதும் எங்களுடையை புனித பூமி என்று இஸ்ரேல் நாடு கூறி வருகிறது. இந்தச் சூழலில் கடந்த வாரம் அல் அசா மசூதிக்கு அருகில் இருந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் படைகள் 5 நாட்களாக தாக்குதல் நடத்தியது. இதில் மசூதிக்கு உள்ளேயும் படைகள் வீசிய குண்டுகள் சென்றுள்ளது. 


இதற்கு பதிலடியாக ஹமாஸ் படை காசா பகுதியிலிருந்து ஏவுகணையை ஏவியது. அதற்கு பதிலடியாக மீண்டும் இஸ்ரேல் காசா பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் 2014ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் காசா பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்தச் சூழலில் பெரிய போராக மாறுமா என்பதை அடுத்தத்த நகர்த்தல்களிலிருந்து தான் தெரிய வரும்.