பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியில் தோல்வி அடைந்த இரண்டே மாதத்தில் மீண்டும் பிரதமர் பதவிக்கான போட்டியில் குதித்து தற்போது பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக். சிறு வயதிலிருந்து அரசியல் வாழ்க்கை வரை அனைவரையும் வியக்க வைக்கிறார் ரிஷி சுனக். 


ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டங்களை பெற்ற ரிஷி, கோல்ட்மேன் சாக்ஸ் முதலீட்டு வங்கியில் சிறிது காலம் பணியாற்றியுள்ளார். பின்னர், பிரிட்டன் நிதியமைச்சராக பொறுப்பு வகித்தபோது, கொரோனா பொருளாதார மீட்பு திட்டத்தை அறிவித்து வெகுவான பாராட்டை பெற்றார்.


பிரிட்டன் அரசியல்வாதிகளிலேயே பணக்காரர்களில் ஒருவராக உள்ள ரிஷி, இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்போசிஸின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளான அக்சதா மூர்த்தியை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2009ஆம் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. 


கடந்த 1980ஆம் ஆண்டு, மே 12ஆம் தேதி, சவுத்தாம்ப்டனில் குடியேறிய இந்திய வம்சாவளி குடும்பத்தில் பிறந்தவர் ரிஷி சுனக். அவரது பெற்றோர் யஷ்வீர் மற்றும் உஷா, இருவரும் மருந்தாளுநர்கள் ஆவர். கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தவர்கள். பஞ்சாபை பூர்வீகமாக கொண்டவர்கள்.


சுனக்கின் தந்தைவழி தாத்தா பாட்டி இப்போது பாகிஸ்தானில் உள்ள குஜ்ரன்வாலா என்ற இடத்திலிருந்து வந்தவர்கள். இருப்பினும், 1930 களில் நடந்த மதக் கலவரம் காரணமாக அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


சுனக் தனது பள்ளிப் படிப்பை வின்செஸ்டர் கல்லூரியில் முடித்தார். இங்கு படித்த ஆறு பேர் நிதியமைச்சர்களாகி உள்ளனர். கோடை விடுமுறையில் சவுத்தாம்ப்டனில் உள்ள இந்திய உணவகத்தில் பணியாளராகவும் ரிஷி பணியாற்றினார். பின்னர், அவர் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் படிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சென்றார்.


2001 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்ட் பல்கைலக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, கோல்ட்மேன் சாச்ஸின் ஆய்வாளராக ஆனார். 2004 வரை முதலீட்டு வங்கி நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்னர், அவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்தார். அங்குதான், அவர் தனது மனைவி அக்சதா மூர்த்தியை சந்தித்தார்.


முதன்முதலில் ரிச்மண்ட் (யார்க்ஸ்) தொகுதியில் இருந்து 2015 இல் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017 மற்றும் 2019 இல் மீண்டும் அதே தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், கன்சர்வேடிவ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார். பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.


பின்னர், அவர் தெரசா மே அரசாங்கத்தில் இணை அமைச்சரானார். 2019 இல், பிரிதமர் போரிஸ் ஜான்சனால் நிதியமைச்சகத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பிப்ரவரி 2020 இல், நிதித்துறை அமைச்சரானார். கடந்த ஜூலை 2022 இல் நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து ரிஷி ராஜினாமா செய்தார். இது போரிஸ் ஜான்சன் பதவி விலக காரணமாக அமைந்தது.