உக்ரைன் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகளுடன் பதற்றம் நிலவி வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்ய அணுசக்தி தடுப்புப் படைகளை  தற்போது தயார் நிலையில் வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.



மேற்கத்திய நாடுகளுடன் சேர்ந்து நேட்டோ சக்திகள், ரஷ்யாவிற்கு எதிராகக் கடுமையான நிதித் தடைகளை விதித்து  "ஆக்கிரமிப்பு அறிக்கைகளை (aggressive statements)" வெளியிட்டதாக அதிபர் புடின் தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.


அணு ஆயுதத் தடுப்புப் படைகளை "போர்க்காலச் சிறப்புப் பிரிவில்" தயாராக வைக்குமாறு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இராணுவத்தின் தலைமை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.


புடினின் இந்த உத்தரவு பல்வேறு நாடுகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. அவரது உத்தரவு "ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்குச் செல்லும் வகையில் உக்ரைனுடனான மோதலைத் தீவிரப்படுத்துவதை" காட்டுவதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் கூறியுள்ளார்.


ரஷ்ய படைகள் இதுவரை உக்ரைன் தலைநகர் கிய்வைக் கைப்பற்றத் தவறியதால், எதிர்பார்த்ததை விட மெதுவாக படையெடுப்பு நகர்வதைக் கண்டு அதிபர் புடின் விரக்தி அடைந்துள்ளதாக ரஷ்யாவில் இருந்து வரும் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.


உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கிவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல பாதிப்பு ஏற்பட்டுள்ளன. அங்கு பயணிகள் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு நேற்று முதல் இணையதள சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், ரஷ்யா - உக்ரைன் போரில் இதுவரை 4,300 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புதுறை துணை அமைச்சர் ஹன்னா மலயார் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்யாவின் 146 டாங்கிகள், 27 போர் விமானங்கள், 26 ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். 


முன்னதாக இன்று காலை ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் இரண்டு பெரிய நகரங்களை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக கூறப்பட்டது.


ரஷ்யா-உக்ரைன் பிரச்னை என்ன?


உக்ரைன் நாடு 1991ஆம் ஆண்டு ரஷ்யாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. அதன்பின்னர் தொடர்ந்து அங்கு உக்ரைன் நாட்டு அரசிற்கு எதிராக அவ்வப்போது கிளர்ச்சியாளர்கள் இருந்து வந்தனர். எனினும் தொடர்ந்து அங்கு ரஷ்யாவின் தலையீடு இருந்து கொண்டே வந்தது. 2005ஆம் ஆண்டு அந்நாட்டின் அதிபராக வந்த விக்டர் யெஸ்சென்கோ ரஷ்யாவின் தலையீடுகளிலிருந்து உக்ரைன் நாட்டை முழுவதும் விடுபட வைப்பதாக கூறினார். 2010ஆம் ஆண்டு ரஷ்யா-உக்ரைன் இடையே ஒரு எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்தானது. 


2013ஆம் ஆண்டு ரஷ்யா நாட்டு உடனான பொருளாதார வர்த்தகத்தை உக்ரைன் நாட்டு அதிபர் நிறுத்தினார். இதன்காரணமாக அங்கு தெற்கு பகுதியில் கடும் கிளர்ச்சி உருவானது. இதைத் தொடர்ந்து  நாட்டின் தெற்கு பகுதியான கிரீமியாவை 2014ஆம் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர் ஆக்கிரமித்து ரஷ்ய கொடியை ஏற்றினர். அதன்பின்னர் கிரீமியா ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் ரஷ்ய ஆதரவாளார்கள் அதிகம் உள்ளனர். அந்தப் பகுதியில் உக்ரைன் நாட்டு அரசு அமைதியை சீர்குலைக்கும் விதகமாக கடந்த சில மாதங்களாக நடந்து வருவதாக ரஷ்ய குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு காரணம் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் அந்நாட்டு அரசு ஒரு டிரோனை பயன்படுத்தியது. இது தான் தற்போது இரு நாடுகளுக்கும் இடையே போர் மூழும் சூழல் உருவாக தொடக்க புள்ளியாக அமைந்தது.