வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் வருவதுபோல் கட்டிப்பிடி வைத்தியத்திற்கு ஒரு தனி எஃபக்ட் இருக்கத்தான் செய்கிறது. மகிழ்ச்சியோ, அன்போ, துக்கமோ, துயரமோ, வெற்றியோ, தோல்வியோ நம்மை அறியாமலேயே நாம் நமக்கு வேண்டியவர்களை கட்டிக் கொள்கிறோம். நாம் வளர்க்கும் செல்லப் பிராணிகள் கூட நம்மிடம் அவ்வப்போது இது போன்ற ஹக் கேட்பதுண்டு. சரியென்று நாமும் ஒரு ஹக் கொடுத்து வைப்போம். ஆனால் இங்க கதையே வேறாக இருந்துள்ளது.


சிங்கத்தின் கட்டிப்பிடி வைத்தியம் :


அண்மையில் ட்விட்டரில் வெளியான ஒரு வீடியோவில் சில சுற்றுலா பயணிகள் லயன் சஃபாரி சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு ஒரு சிங்கம் வருகிறது. அது எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க சஃபாரி வாகனத்திற்குள் குதிக்கிறது. ஆனால் யாரையும் அது கடிக்கவில்லை, தாக்கவில்லை. மாறாக ஒரு குழந்தையைப் போல் எல்லோரின் கைகளிலும் தவழ்ந்து கட்டிப்பிடிக்கச் சொல்லாமல் சொல்லி உணர்வுகளை வெளிப்படுத்தியது. இந்த வீடியோ இதுவரை 5.6 மில்லியன் பார்வைகளைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.


இதனைப் பார்த்த சில ட்விட்டராட்டிகள்.. சிங்கத்திற்கு அன்பு தேவைப்படுகிறது என்று பதிவிட்டனர். இது ரொம்ப பயமாக இருக்கிறது என்று இன்னொருவர் தெரிவித்தார். மற்றொரு இணையவாசி இதுபோன்ற விபரீதமான சாகசம் எல்லாம் செய்து மனித உயிர்களுடன் விளையாட வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார். விலங்குகள் எப்போதும் அவற்றின் குணத்தை காட்டிவிடும் என்று எச்சரித்துள்ளார்.






ஃப்ரீ ஹக்ஸ் வரலாறு:


சில காலம் உலகம் முழுவதும் ஃப்ரீ ஹக்ஸ் பிரச்சாரம் மிகவும் பிரபலமாக இருந்தது. இது முதன்முதலில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஜூவான் மான் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. ஜூன் 30, 2004ல் இது ஆரம்பிக்கப்பட்டது. இது குறித்து ஜூவான் மான் கூறும்போது, நான் என் தனிப்பட்ட பிரச்சனைகளால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். ஒரு நாள் நான் ஒரு பப்பிற்கு சென்றிருந்தேன். அங்கே என்னை யாரோ ஒருவர் திடீரென்று ஆரத்தழுவிச் சென்றார். அது என்னை ஆசுவாசப்படுத்தியது.


முகம் தெரியாத நபரின் அந்த நபரின் தழுவல் எனக்கு மன நிம்மதியும் ஆறுதலும் தந்தது. அந்த வேளையில் நான் ஒரு ராஜாவைப் போல் உணர்ந்தேன். அதன் பின்னர் நான் இதனை ஏன் பொது பிரச்சாரமாக முன்னெடுக்கக் கூடாது என்று நினைத்தேன். அப்படித்தான் இந்த ஃப்ரீ ஹக்ஸ் பிரச்சாரத்தை முன்னெடுத்தேன் என்று கூறியிருந்தார். இன்றளவும் இந்த ஃப்ரீ ஹக்ஸ் மிகவும் பிரபலமாக இருக்கிறது. உலகம் முழுவதும் இந்த பிரச்சாரத்தை தாமாக முன்னெடுப்பவர்கள் உள்ளனர். கையில் அல்லது கழுத்தில் ஒரு பதாகை வைத்திருப்பார்கள். அதில் ஃப்ரீ ஹக்ஸ் என்று எழுதப்பட்டிருக்கும்.  லயன் ஹக்ஸ் ஆபத்தானது தான் என்றாலும் இந்த ஃப்ரீ ஹக்ஸை நாம் எல்லோருமே பின்பற்றலாம்.