வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள அத்தனை சிங்கங்களுக்கும் கொரொனா பாசிட்டிவ் உறுதியானதை அடுத்து மற்ற விலங்குகளுக்கும் கொரோனா பரவாமல் தடுக்க சிறப்புப் பாதுகாப்புக் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு நிறுவியுள்ளது. விலங்குகளில் கொரோனா பரவுவது இது முதன்முறையல்ல. உலக அளவில் இதுவரை சிங்கம், புலி, கொரில்லாக்கள், மிங்க்  என்னும் கீரிவகை உயிரினங்கள் என குட்டிப்போட்டு பாலூட்டும் பல உயிரினங்களில் கொரோனா வைரஸ்கள் பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளன, வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற உயிரனங்களும் இதில் அடக்கம். அப்படி இதுவரை சர்வதேச அளவில் விலங்கினங்களில் பதிவு செய்யப்பட்ட புகார்கள் என்னென்ன? 



  • தமிழ்நாட்டின் வண்டலூரைத் தவிர உத்திரப்பிரதேசத்தின் எத்வாஹ் சஃபாரி பூங்காவில் உள்ள இரண்டு பெண் சிங்கங்களுக்குக் கொரோனா உறுதிசெய்யப்பட்டிருந்தது.


  • அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் மற்றும் பூனைகளில் சார்ஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவு செய்யப்பட்டது. ஸ்லோவேனியாவில் ஒரு மரநாய்க்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

  • உயிரியல் பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களில் இருந்த சிங்கம், புலி, ப்யூமா, காட்டுப்பூனை உள்ளிட்ட பெரும்பூனை வகை உயிரினங்களிலும், கொரில்லா உள்ளிட்ட விலங்குகளிலும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டதும் அவற்றில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது.இவை பெரும்பாலும் அந்த விலங்குகளின் பராமரிப்பாளர்களிடமிருந்து பரவியிருக்கின்றன. குறிப்பாக மாஸ்க் உள்ளிட்ட தற்காப்பு உபகரணங்களின் அணிந்துகொண்ட பிறகும் கூட இவைப் பரவியிருக்கின்றன.


  • மிங்க் என்பவை கீரிப்பிள்ளைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவகை உயிரினம். அமெரிக்கா உட்பட பல்வேறு சர்வதேச நாடுகளில் இந்த மின்க்கள் மூச்சுபிரச்னையால் பாதிக்கப்படுவதாகவும் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இருப்பினும் ஒரு சில மின்க்கள் நன்கு ஆரோக்கியமாகவே காணப்பட்டன.


  • பாதிக்கப்பட்ட மனிதர்கள் எவரேனும் இந்த மிங்க்களுடன் தொடர்புக்கு வந்து அவர்களில் இருந்து மற்ற மின்க்களுக்கு கொரோனா தொற்று பரவியிருக்க வேண்டும், துரதிர்ஷ்டவசமாக மின்க்களில் இருந்து மற்றொரு மின்க்களுக்குப் பரவுவதோடு மட்டுமல்லாமல் இவற்றிலிருந்து மற்ற விலங்குகளுக்கும் பரவின

  • உதாஹ் பகுதியில் காட்டு மின்க் ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.ஆனால் அதனிடமிருந்து யாருக்கெல்லாம் பரவியது என்கிற எந்தவிவரத்தையும் கண்டறியமுடியவில்லை.

  • மேலும் மின்க்களிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியதாகவும் டென்மார்க், போலாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் பதிவு செய்திருந்தன.

  • அமெரிக்காவின் மிச்சிகன் மாகானத்தில் மனிதர்களிடமிருந்து மின்க்களுக்குத் தொற்றிய கொரோனா வைரஸ் பரிணாம வளர்ச்சி அடைந்த புதிய வைரஸாக அந்த மாகாணத்தின் பண்ணையில் வேலைபார்த்த நபர்களுக்குத் தொற்றியது.

  • டென்மார்க்கில் மனிதர்களிடமிருந்து மின்க்களுக்குப் பரவிய கொரோனா வைரஸ் ஐந்து மடங்கு பரிணாம வளர்ச்சி அடைந்து க்ளஸ்டர் 5 (Cluster 5) ரகமாக மாறி அது மனிதர்களுக்கும் பரவியது.

    Also Read: ’நீட் பாதிப்பு பற்றி ஏ.கே.ராஜன் கமிட்டிக்கு மெயில் அனுப்புகிறேன்’ - நடிகர் சூர்யா!