தைவானுடனான அனைத்து உறவுகளையும் முடித்துக் கொள்ளுமாறு அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஏற்பட்ட 1949 ஆம் ஆண்டு உள்ளூர் போரில் சீனாவில் இருந்து தைவான் பிரிந்து தனி இறையான்மை கொண்ட நாடாக உள்ளது.


ஆனால் பிரிந்த நாள் முதலே தைவான் தனக்கு சொந்தமானது என சீனா கூறி வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தாங்கள் எந்த நாட்டிற்கும் சொந்தமானவர்கள் இல்லை , எங்கள் நாடு தனித்த நாடு என தொடர்ந்து தைவானும் போர்க்கொடி பிடித்து வருகிறது. ஆனாலும் அவ்வபோது சீனா தைவான் எல்லைக்குள் போர்படைகளை அனுப்பி பயம் காட்டி வருவது நாம் அறிந்ததுதான். ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்னால்  சீனாவின்  சீண்டல்கள் சற்று அதிகமாகியிருக்கிறது எனலாம்.


இந்தச் சூழலில் தான் கடந்த 25 ஆண்டுகளில், அமெரிக்க அரசு உயர் பதவியில் இருக்கும் மக்கள் பிரதிநிதி ஒருவர் தாய்வானுக்கு வந்தார். ஆம், நான்சி பெலோஸி தைவானுக்கு வருகை தந்தார். அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் வருகை ஏப்ரல் மாதம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் திட்டம் தள்ளிவைக்கப்பட்டது. ஆரம்பம் முதலே சீனா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால் பல எதிர்ப்புகளையும் மீறி நான்சி வந்தார். அவர் வந்திறங்கியவுடனேயே  வந்திறங்கிய சில மணி நேரத்திற்குள் தைவான் வான் எல்லைக்குள் 21 சீன் போர் விமானங்கள் பறந்தன.  அது மட்டுமல்லாது தொடர்ந்து 15 நாட்களுக்கு மேல் போர் ஒத்திகைகளை நடத்தியது சீனா.


அமெரிக்காவுக்கு எச்சரிக்கை:
அந்தப் பதற்றமே இன்னும் அடங்கவில்லை அதற்குள் அமெரிக்க ரிபப்ளிக் கட்சியைச் சேர்ந்த மார்ஷா ப்ளாக்பர்ன் தைவான் வந்துள்ளார். அவர் தைவான் அதிபர் சை வான் இங்கை சந்தித்தார். நேற்று (ஆகஸ்ட் 26) இந்த சந்திப்பு நடந்தது. இதனை ஒட்டி பேசிய சீன வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர், மார்ஷாவின் தைவான் பயணம் ஒரே சீனா கொள்கைக்கு விரோதமானது. தைவானுடன் அலுவல் சார்ந்து இல்லாமல் மட்டுமே உறவுகளைப் பேணுவோம் என்று அமெரிக்கா முன்பு செய்திருந்த ஒப்பந்தத்தை மீறுவதாகும். உலகில் ஒரே ஒரு சீனா தான் இருக்கிறது. தைவான் சீன பிரந்தியத்தின் பகுதி. தைவான் விடுதலைப் போராட்டங்கள், பிரிவினைவாத செயல்பாடுகள், வெளியில் இருந்து வரும் தலையீடுகள் என எல்லாவற்றையும் சீனா எதிர்க்கிறது. அதனால் தைவானுடனான அனைத்து உறவுகளையும் அமெரிக்கா துண்டித்துக் கொள்ள வேண்டும் என்றார்.


இந்நிலையில் தைவான் அதிபரை சந்தித்த பின்னர் பேட்டியளித்த மார்ஷ் ப்ளாக்பர்ன், சீனாவின் மிரட்டல்கள் எதுவுமே புதிதல்ல. இதெல்லாம் தைவானை தொந்தரவு செய்ய சீனா தேடிக்கொள்ளும் சாக்கு என்றார்.