அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் பணியாளர் ஒருவர் கடந்த 20 ஆண்டுகளாக நாள் ஒன்றுக்கு 30 கேன் வீதம் பெப்சி குடித்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவின் பிரபல நாளிதழ் ஒன்றில் வெளிவந்துள்ள தகவலின்படி, ஆண்டி க்யூரி எனும் இந்நபர் தன் 20 வயதில் பெப்சி பானத்துக்கு அடிமையாகியுள்ளார். இந்நிலையில் முன்னதாக இவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஹிப்னாடிச சிகிச்சையின்போது இத்தகவலை மயக்க நிலையில் க்யூரி தெரிவித்துள்ளார்.


மொத்தம் 2 லட்சம் கேன்கள்




தற்போது இவருக்கு 41 வயதாகும் நிலையில், அன்று தொடங்கி இன்று வரை சுமார் 2 லட்சத்து 19 ஆயிரம் கேன்கள் பெப்சியைப் பருகி வந்துள்ளார். இது கிட்டத்தட்ட 8 ஆயிரம் கிலோ சர்க்கரைக்கு சமம்.


மேலும், பெப்சி குடிக்கவென நாள் ஒன்றுக்கு 25 டாலர்கள் செலவழித்துள்ளதாகவும், ஆண்டுக்கு  சுமார் 8,500 டாலர்கள் இந்திய மதிப்பின்படி (சுமார் ஆறு லட்சத்து 63 ஆயிரம்!) செலவாகியுள்ளதாகவும் க்யூரி தெரிவித்துள்ளார்.


பெப்சி வாங்குன காசுக்கு கார்கள் வாங்கி இருக்கலாம்!


தனக்கு பிடித்த பெப்சிக்கு செலவழித்த பணத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கார் வாங்கி இருக்கலாம் எனக் கூறும் இவர், தனக்கு பெப்சியின் தேவை பெரிதாக இருந்ததாகவும், தினம் எழுந்தவுடன் குளிர்சாதனப்பெட்டிக்குச் சென்று ஒரு பெரிய கிளாஸ் பெப்சியை ஊற்றிக்கொண்டு தான் அன்றைய தினத்தை தொடங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.


இவரது எடை முன்னதாக 266 பவுண்டுகளாக உயர்ந்த நிலையில், சர்க்கரை நோய் அபாயத்தை உணர்ந்த க்யூரி, உடற்பயிற்சி, டயர் என 28 பவுண்டுகளைக் குறைத்துள்ளார். ஆனால், அவரால் பெப்சி குடிப்பதை நிறுத்த முடியவில்லை. 


20 ஆண்டுகளுக்கு தண்ணீர் குடித்தார்!




இந்நிலையில், முன்னதாக இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணரும், ஹிப்னாடிஸ்டுமான டேவிட் கில்முரியை க்யூரியை அணுகியபோது தவிர்க்க வேண்டிய உணவுகளை அதிகமாக உட்கொள்ளும் டிஸ் ஆர்டர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


தற்போது க்யூரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறையாக் க்யூரி தண்ணீர் அருந்தியுள்ளார். மேலும், கடந்த நான்கு வாரங்களில் 14 பவுண்டுகள் வரை அவர் குறைத்துள்ளதாகவும், தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தனது உடல்நிலை குறித்து முன்னதாக க்யூரி பேசியபோது, நான் கடந்த ஒரு மாதமாக பெப்சி கேன்களையே தொடவில்லை. நான் இப்போது தண்ணீரையே விரும்புகிறேன். என் சருமம் இப்போது தான் நன்றாக இருப்பதாக என் மனைவி சாரா தெரிவித்துள்ளார். நான் என் ஆற்றல் அதிகரித்திருப்பதாக உணர்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.