ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மெஹர் நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், மத்திய கிழக்கு போர் குறித்த தனது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்தார். மேலும், அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப் உடனான தனது பேச்சுவார்த்தைகள் குறித்தும் அவர் விளக்கியுள்ளார். 12 நாள் போருக்கு முன்பு நடந்த பேச்சுவார்த்தைகளில், யுரேனியம் செறிவூட்டல் முற்றிலும் கூடாது என்று அமெரிக்கா கோரியிருந்ததாக அராக்சி குறிப்பிட்டார்.
“12 நாட்கள் போரில் அமெரிக்கா தோல்வியடைந்தது“
அந்த பேட்டியில், "இந்த சட்டவிரோதமான மற்றும் அபத்தமான கோரிக்கையை நாங்கள் எதிர்த்து, எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றோம்," என்று அராக்சி கூறினார். பேச்சுவார்த்தைகள் மூலம் தங்கள் கோரிக்கைகளை அடைய முடியாது என்பதை அமெரிக்கர்கள் உணர்ந்தபோது, அவர்கள் போரை நாடினர் என்று அராக்சி விளக்கினார். மேலும், “பேச்சுவார்த்தை மேசையில் ஈரானின் விடாமுயற்சி, அமெரிக்காவை கடினமான பாதையை தேர்ந்தெடுக்க நிர்பந்தித்தது என்றும், அதன் விளைவாக 12 நாள் போரில் அது தோல்வியடைந்தது என்றும் அவர் கூறினார்.
விட்காஃபிடம் சென்ட்டிமென்டாக கேள்விகளை எழுப்பிய அராக்சி
அமெரிக்கத் தூதர் விட்காஃபுடனான தனது உரையாடலை குறிப்பிட்ட அராக்சி, "நான் அவரிடம் கேட்டேன், 'முழு கூட்டத்தின் மீதும் ஒரு குண்டு வீசப்படலாம் என்று நீங்கள் எப்போதாவது உணர்ந்த ஒரு கூட்டத்தில் இருந்திருக்கிறீர்களா? தொலைபேசியில் பேசும்போது எந்த நேரத்திலும் நீங்கள் வெடித்துவிடுவீர்கள் என்று எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? உங்கள் குடும்பத்தினரின் நலனை விசாரிக்க நீங்கள் அழைத்தபோது, இதுவே கடைசி முறையாக இருக்கலாம் என்று எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? நாங்கள் இவை அனைத்தையும் அனுபவித்திருக்கிறோம், மேலும் நாங்கள் விடாமுயற்சியுடன் இருந்தோம்.'" என்று கூறினார்.
"எந்த லஞ்சமோ மிரட்டலோ பலனளிக்காது“
மேலும், "நான் விட்காஃப்பிடம், 'நீங்கள் எங்களிடம் வித்தியாசமாகப் பேச வேண்டும். எங்களை மிரட்டவோ அல்லது லஞ்சம் கொடுக்கவோ முடியாது' என்று கூறினேன்," என்றார். சலுகைகளுக்கு ஈடாக மின் உற்பத்தி நிலையங்களையும் உள்கட்டமைப்புகளையும் அமைத்துத் தருவதாக அமெரிக்கா முன்வந்ததாக அராக்சி கூறினார், ஆனால் அவர், "எந்த லஞ்சமோ மிரட்டலோ பலனளிக்காது. பயப்படுபவர்களுக்கு மட்டுமே மிரட்டல் விடுக்க முடியும். நாங்கள் இந்தப் பாதையில் பயணிக்கும்போது, எந்த நேரத்திலும் எங்களுக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது எங்களுக்குத் தெரியும், எனவே நீங்கள் என்னை அச்சுறுத்த முடியாது," என்று கூறியுள்ளார்.
“பயந்து பின்வாங்க இது வெனிசுலா அல்ல“
அதோடு, கடந்த ஜனவரி 3 ஆம் தேதி, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு விசாரணைக்காக நியூயார்க்கிற்கு அழைத்துச் செல்லப்பட்ட அமெரிக்க நடவடிக்கையையும் அராக்சி குறிப்பிட்டு பேசியுள்ளார். அது குறித்து கூறிய அவர், "இது, ஒருவரை கைது செய்தால் மற்ற அனைவரும் பயந்து பின்வாங்கும் வெனிசுலா அல்ல" என்று கூறி ஈரானின் நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.
