விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் 


 

கடந்த ஜூன் மாதம் ஏவப்பட்ட ஸ்டார்லைனர் விண்கலமானது, விண்வெளி பயணங்களை  சோதனை செய்யும் வகையில் இரண்டு விண்வெளி வீரர்களான இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் மற்றொரு வீரர் புட்ச் வில்மோர் ஆகியோரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு சென்றது.

 

முதலில் சுமார் எட்டு நாட்கள் பயணம் என்று திட்டமிடப்பட்ட நிலையில், விண்கலத்தின் என்ஜினில் உள்ள பல்வேறு சிக்கல்கள் காரணமாக, பூமி திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, சிக்கல்களை சரிசெய்ய போயிங் மற்றும் நாசா தீவிரமாக முயற்சித்தும் பலனளிக்கவில்லை. 

இந்த சிக்கல்களால் ஸ்டார்லைனரின் விண்கலத்தில் பயணித்த மூத்த நாசா விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரை உடனடியாக திரும்ப அழைத்து வருவதில் சிக்கல் எழுந்தது.

 

மீட்க புறப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ்


 

இந்நிலையில், போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலமானது, பாதுகாப்பு காரணங்களால் விண்வெளி வீரர்கள் இல்லாமல் , விண்கலம் மட்டும் தனியாக திரும்பியது. 

 

இதன் விளைவாக, அவர்களை பூமிக்கு கொண்டு வர  எலன் மஸ்க்கிஸ்ர்க்குச் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ்  நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலமானது, சில நாட்களுக்கு முன்பு விண்வெளிக்குச் சென்றது. எலன் மஸ்க்கிற்குச் சொந்தமான SpaceX க்ரூ டிராகன் விண்கலமானது, வழக்கமான நான்கு விண்வெளி வீரர்களுக்குப் பதிலாக இரண்டு விண்வெளி வீரர்களை மட்டுமே கொண்டு  செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.  இதன் மூலம் வில்மோர் மற்றும் வில்லியம்ஸுடன் பூமிக்குத் திரும்ப திட்டமிட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இவர்கள் 2 பேரும் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் பூமி திரும்பவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

 

இந்திய வம்சாவளியாக சுனிதா வில்லியம்ஸ் இருந்தாலும் , அவர் அமெரிக்க நாட்டின் குடியுரிமையை பெற்றிருக்கிறார். இந்நிலையில் , அடுத்த மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. 

 

இந்த தருணத்தில் , விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் வாக்களிக்கிறார். 

 

எப்படி வாக்களிப்பர்:


 

அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி மையமானது , விண்வெளியில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு , வாக்குச் சீட்டு அடங்கிய மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைக்கும். 

அந்த மின்னஞ்சலை பெற்ற விண்வெளி வீரர்கள், அவர்களின் விருப்பமான வேட்பாளருக்கு வாக்களித்து, மீண்டும் பூமியில் உள்ள நாசா கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்புவர். 

இதையடுத்து, அந்த வாக்குகள் , வீரர்களுக்குச் சொந்தமான மாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.  இதையடுத்து, அந்த வாக்குகள் , இதர வாக்குகளுடன் சேர்த்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 

 

அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பாக கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசு கட்சியின் சார்பாக டொனால்டு டிரம்ப் களமிறங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.