ரஷியாவில் அந்நாட்டு ராணுவத்திற்கு எதிராக வாக்னர் கூலிப்படை நடத்திய கிளர்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. உலகின் சக்தி வாய்ந்த தலைவராக கருகப்படும் ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக வாக்னர் கூலிப்படை நடத்திய கிளர்ச்சி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


ரஷியா அரசுக்கும், வாக்னர் கூலிப்படைக்கும் இடையே உடன்படிக்கை எட்டப்பட்டதை தொடர்ந்து, வாக்னர் கூலிப்படை தலைவர் பிரிகோசின் பெலாரஸில் தஞ்சமடைந்ததாக கூறப்பட்டது. 


இதையும் படிக்க: Lebanon Clashes: லெபனான் முகாமில் வன்முறை: 6 பேர் உயிரிழப்பு - அச்சத்தில் வெளியேறும் அகதிகள்: நடப்பது என்ன?


ரஷிய அதிபர் புதினை அலறவிட்ட வாக்னர் கூலிப்படை:


இப்படிப்பட்ட சூழலில்தான், ரஷியாவின் மாஸ்கோவில் இருந்து செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த விமானம், எதிர்பாராத விதமாக டிவெர் மாகாணத்தில் குசென்கினோ கிராமத்திற்கு அருகே கீழே விழுந்து நொறுங்கியது. இதில், பயணித்த பிரிகோசின் உயிரிழந்தாக ரஷியா அரசு அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டது.


விமான விபத்தில் பிரிகோசின் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும் அவரது இறப்பில் பல மர்மங்கள் தொடர்வதாக உலக தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இந்த நிலையில், வாக்னர் கூலிப்படையை பயங்கரவாத அமைப்பாக பிரிட்டன் அறிவித்துள்ளது. வாக்னர் கூலிப்படையில் உறுப்பினராக சேர்வதும் ஆதரிப்பதையும் பிரட்டனர் அரசு கடந்த வாரம் சட்டவிரோதமாக்கியது. 


வாக்னர் கூலிப்படையின் வரலாறு:


பிஎன்சி வாக்னர் எனப்படும் வாக்னர் கூலிப்படை, ரஷிய நாட்டின் துணை ராணுவ அமைப்பாகும். சட்டத்திற்கு அப்பாற்பட்டு வேலை செய்து வருகிறது. அடிப்படையில், இது ஒரு தனியார் ராணுவ அமைப்பாகும். கூலிப்படையினரை கொண்டு இயங்கி வருகிறது. கிழக்கு உக்ரைனில் ரஷிய சார்பு பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவளிக்கும் போது இந்த குழு முதலில் 2014இல் அடையாளம் காணப்பட்டது.


கடந்த 2014ஆம் ஆண்டில், பெரும்பாலும் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலேயே இந்த  ரகசிய அமைப்பு இயங்கி வந்தது. இந்த குழுவில் ரஷியாவின் உயரடுக்கு படைப்பிரிவுகள் மற்றும் சிறப்புப் படைகளைச் சேர்ந்த சுமார் 5,000 போராளிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.


உக்ரைன் போரில் வாக்னர் கூலிப்படையால்  50,000 போராளிகள் இறக்கப்பட்டுள்ளனர் என்றும் உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவின் முக்கிய அங்கமாக வாக்னர் படை மாறியுள்ளது என்றும் ஜனவரி மாதம் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. 


யார் இந்த எவ்ஜெனி பிரிகோஜின்?


உக்ரைன் போரின் முகமாக இருந்து வரும் இவர், தன்னை பற்றி விளம்பரம் செய்து கொள்வதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். மோசமான வார்த்தைகளை பேசி சர்ச்சையில் சிக்கும் இவர், சண்டையிடுவதற்காக ஆயிரக்கணக்கான ரஷிய கைதிகளை வாக்னர் கூலிப்படையில் சேர்த்தார். போரின்போது போதுமான ஆயுதங்களை வழங்கவில்லை என ரஷியா ராணுவத்துடன் மோதலில் ஈடுபட்டு வருகிறார்.


இதையும் படிக்க: G20 Summit: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதிதான்.. அங்கீகரித்து குறிப்பிட்ட ஐக்கிய அரபு நாடுகள்..