துருக்கி, கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி நிலநடுக்கத்திலிருந்தே மீளவில்லை. ஆனால் அங்கு இன்னும் நில அதிர்வுகள் ஓய்ந்தபாடில்லை. 


இந்நிலையில் துருக்கியில் நிலநடுக்கம் மீண்டும் ஏற்பட்டது. ரிக்டரில் 5.6 ஆக பதிவானதாக தகவல் கிடைத்துள்ளது.
 
துருக்கி-சிரியா நிலநடுக்கம்:


கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி  துருக்கி- சிரியா எல்லைப்பகுதியான காசியான்டெப் மாகாணத்தில் அமைந்துள்ள நூர்டகி நகரத்திற்கு கிழக்கே 26 கிலோமீட்டர் தொலைவில் 4.1 கிலோமீட்டர் ஆழத்தில் அதிகாலை  சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.  ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் பல கட்டிடங்கள்  சரிந்து விழுந்து தரைமட்டமாகின. 


அதிகாலை நேரம் என்பதால் மக்கள் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், இந்த கட்டிட இடிபாடுகளில் பலரும் சிக்கிக்கொண்டனர். அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஐந்து முறை ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பேரழிவில் துருக்கி மற்றும் சிரியாவைச் சேர்ந்த 45 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் இந்த பாதிப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. மக்கள் பலரும் வீடுகளை இழந்தனர். 


அடுத்தடுத்து புதிய நிலநடுக்கம்


ஒரு வழியாக 2 வார கால மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 21 ஆம் தேதி இரவு 8.04 மணிக்கு மீண்டும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையத்தின் தகவல்படி, ஹடாய் மாகாணத்திற்கு தெற்குப் பகுதியில்  துருக்கி-சிரியா எல்லைப் பகுதியான அனடோலுவில் தான் நிலநடுக்கம் ஏற்பட்டது.  முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவில்  6.4 என பதிவானது. இதேபோல் 2வது நிலநடுக்கம் 5.8 ஆக பதிவானது. இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர்.  இந்நிலையில் இந்த இரண்டு நிலநடுக்கங்களில் உயிர்ப்பலி பதிவானது. 


இதையடுத்து, பிப்ரவரி 25ஆம் தேதி மீண்டும் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏறபட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவானதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் சரிந்தததாகவும் கூறப்படுகிறது.