திபெத் பகுதி சீனாவின் ஒரு அங்கமா அல்லது சுதந்திரமான பகுதியா என்ற விவகாரத்தால் சீனாவுக்கும் நாடு கடந்த திபெத் அரசாங்கத்திற்கும் பிரச்னை நிலவி வருகிறது. வரலாற்றில், திபெத் எப்போதும் சீனாவின் பகுதியாக இருந்ததில்லை என நாடு கடந்த திபெத் அரசு கூறி வருகிறது. ஆனால், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே திபெத் உள்ளதாக சீன அரசு தெரிவித்து வருகிறது.


இம்மாதிரியான சூழலில், திபெத்திற்கு தன்னாட்சி கோரி வரும் புத்த மத தலைவர் தலாய் லாமாவுக்கும் நாடு கடந்த திபெத் அரசாங்கத்தின் தலைவர்களுக்கும் இந்தியா அடைக்கலம் தந்து வருவது சீனாவை கோபத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை இருந்து வந்த நிலையில், கல்வானில் இரு நாட்டு ராணுவ வீரர்கள் மோதி கொண்டது இரு நாட்டு உறவில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. 


எல்லை பிரச்னை மட்டும் இன்றி திபெத் விவகாரமும் இந்திய - சீன நாடுகளுக்கு இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட காரணமாக உள்ளது. இந்த நிலையில், இந்திய - சீன நாடுகளுக்கு இடையேயான உறவில் திபெத் அரசாங்கத்தால் பாலமாக இருக்க முடியும் என நாடு கடந்த திபெத் அரசாங்கத்தின் அதிபர் பெண்பா செரிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


கடந்த 2011ஆம் ஆண்டு, நாடு கடந்த திபெத் அரசாங்கத்தால் மத்திய திபெத்திய நிர்வாகம் என்ற ஜனநாயக அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் அரசியல் தலைவராக அதிபர் பெண்பா செரிங் பதவி வகித்து வருகிறார். இவர், கர்நாடகாவில் உள்ள பைலகுப்பே திபெத்திய அகதிகள் முகாமில் பிறந்தவர். லோப்சங் சங்கேவை தொடர்ந்து, கடந்த 2021ஆம் ஆண்டு, மத்திய திபெத்திய நிர்வாகத்தின் அரசியல் தலைவராக பெண்பா செரிங் நியமிக்கப்பட்டார்.


நாடு கடந்த திபெத்திய அரசாங்கத்தின் தலைவராக உள்ள பெண்பா செரிங், ஜனநாயக விழுமியங்களிலும் இந்தியாவில் வாழும்  திபெத்திய இளைஞர்களிடையே இணக்கமான உறவை ஏற்படுத்தி கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் திபெத்திய அகதிகள் மத்தியில் ஜனநாயக நெறிமுறைகளைப் பேணுவதில் முக்கியத்துவம் அளித்து வருகிறார்.


நமது ABP LIVEக்கு அவர் அளித்த பேட்டியின் தமிழாக்கம் இதோ:


திபெத்திற்கு முழுமையான சுதந்திரம் வேண்டுமா அல்லது சீனாவிற்குள் திபெத்தை தன்னாட்சிப் பிரதேசமாக மாற்ற விரும்புகிறீர்களா? இரண்டுக்கும் கொஞ்சம் வேறுபாடு உள்ளதே?


சுதந்திரம் என்பது மிகவும் பொதுவான சொல். ஆனால், இறையாண்மையின் அடிப்படையில் குறிப்பிட்ட அர்த்தத்தை தரும் சொல். தலாய் லாமாவின் சிந்தனை யார் ஆள்கிறார்கள் என்பதை பற்றி அல்ல. ஆட்சியின் தரம் பற்றியது என்று நான் நினைக்கிறேன். அதனால் அது ஒரு திபெத்தியனாக இருந்தாலும், அந்த திபெத்தியன் நன்றாக ஆட்சி செய்யவில்லை என்றால் அது மக்களுக்கு உதவாது. நன்றாக யார் ஆட்சி செய்தாலும் அது நடைமுறைப்படுத்தக்கூடியதுதான். இதனால்தான் இருவேறு கொள்கையின் நடுவே நாம் சுயாட்சியைத் தேடுகிறோம். சுதந்திரத்தை அல்ல.


தற்போதைய காலத்தில் திபெத்திய இயக்கத்தின் மீதான இந்தியாவின் ஒட்டுமொத்த அணுகுமுறையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?


கூர்ந்து கவனிப்பவர்களுக்கு, சிறிய மாற்றங்கள் நடந்திருப்பது தெரியும் என நான் நினைக்கிறேன். ஆனால், பொதுப் பார்வையாளருக்கு அது தெளிவாகத் தெரியவில்லை. இந்திய அரசாங்கத்தைத் தவிர, திபெத்தின் காரணத்தைப் பற்றி நிறைய இந்திய அறிவுஜீவிகள் எழுதுவதையும் நாம் இப்போது காண்கிறோம். எதிர்க்கட்சிகளிடமிருந்து அதிக எதிர்வினை வருகிறது. எனவே, சீன - திபெத்திய மோதலில் அனைவருக்கும் ஆர்வம் உள்ளது. ஆனால், இந்தியா எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பது இன்னும் ஒரு கேள்வி.


தற்போது நடைபெற்று வரும் இந்தியா - சீனா எல்லை பிரச்னை சீன - திபெத்திய மோதலையும் பாதிக்குமா? ஏனெனில் இந்திய - சீனா நாடுகளுக்கு இடையேயான எல்லை பிரச்னை அடிப்படையில் திபெத்திய எல்லைியில் நடந்து வருகிறது?


சீன - இந்திய மோதல் ஏற்படும் போது திபெத் இயற்கையாகவே இந்த பிரச்னையின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறது. ஏனெனில், மோதல் இந்தியா-திபெத் எல்லையில் நடக்கிறது. எல்லை பிரச்னை நிலவும் பகுதி திபெத்திய பிரதேசம் என சீனா உரிமை கொண்டாடுகிறது. 
அதேசமயம், எங்கள் எல்லை குறித்து நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். 


5ஆவது தலாய் லாமா காலத்திலேயே லடாக் எல்லை பிரச்னை தீர்க்கப்பட்டது. மீதமுள்ள எல்லை பகுதியான மக்மஹோன் கோட்டை சுதந்திர நாடாக அறிவித்து பிரிட்டிஷ் இந்தியாவுடன் கையெழுத்திட்டோம். இந்தியா இன்னும் மெக்மஹோன் வழியைப் பின்பற்றுகிறது. அந்த நேரத்தில் திபெத்தின் அந்தஸ்துக்கு சில அங்கீகாரம் இருக்க வேண்டும் என கருதினோம். ஆனால், இப்போதைக்கு அது நடக்காது. அதுவும் புரிந்துகொள்ளக்கூடியது. இருப்பினும், இப்போது மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், எல்லை பிரச்னையாக இருந்தாலும் அல்லது வேறு எந்த விழுமியங்களுக்காக இருந்தாலும் சரி தங்களது நிலைபாட்டுக்காக இந்தியாவால் துணிச்சலாக நிற்க முடியும். சீன அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு நீங்கள் அடிபணிய மாட்டீர்கள். இது எங்களுக்கு மிகவும் மதிப்புமிக்க ஒன்று.


ஆனால், அதிபர் ஷி ஜின்பிங்கின் கீழ், சீனாவின் பிரச்னைகள் மிகவும் சிக்கலானதாக மாறவில்லையா?


அது நல்லதாகவும் இருக்கலாம். கெட்டதாகவும் இருக்கலாம். இரண்டும் இருக்கலாம். ஏனென்றால், எல்லா அதிகாரங்களும் கையில் இருக்கும் போது, ​​அந்த ஒரு கை நல்லது செய்தால், அந்த நாட்டையும், ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தையும் சரியான திசையில் கொண்டு செல்ல முடியும். ஆனால், அவர் தவறான பாதையில் செல்ல முடிவு செய்தால், அது அனைவருக்கும் பேரழிவை ஏற்படுத்தும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத்துவத்தைப் பற்றியும், கம்யூனிஸ்ட் கட்சி உயிர்ப்புடன் இருப்பதற்காகவும் மாவோவின் வழியைப் பற்றி அவர் அதிகம் சிந்திக்கிறார். எனவே, இப்போது சீனத் தலைமையிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு வார்த்தையும் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை பற்றியது. வேறொன்றுமில்லை. எல்லாரையும் தூண்டுவது யார்? மற்ற நாடுகளை தாக்கி, காலனித்துவ சிந்தனையுடன் சீனா இருந்து வருகிறது. சீனாவை மற்ற நாடுகள் தாக்குவதில்லை. ஜப்பான், தைவான், ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே, வியட்நாம், இந்தியா போன்ற நாடுகளை சீனா தாக்குகிறது. சீனா போர்க்குணமிக்க நாடாக உள்ளது.


இன்னும் உங்களிடம் சீன அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதா?


மறைமுகமாக அவர்களிடம் பேசி வருகிறோம். ஆனால், அதைப் பற்றி என்னால் அதிகம் சொல்ல முடியாது. முதலில், எங்கள் தொடர்புகளை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். அதில், தற்போது உறுதியாக இருக்கிறோம்.


எனவே, இதை மனதில் வைத்துக்கொண்டு, அவர்களுடன் பேசுவதற்கான முயற்சிகளை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளீர்களா?


சர்வதேச சமூகத்தை அணுகுவது எங்கள் பணி. ஆனால், எதேச்சதிகார தலைவர்களைக் கொண்ட நாடுகளை நீங்கள் அணுக முடியாது.  நம் நலன்களை சீனாவை நோக்கி அதிகம் இணைக்க முடியாது. எங்களால் ஜனநாயக, சுதந்திர உலக நாடுகளை மட்டுமே அணுக முடியும்.


மத்திய திபெத்திய நிர்வாகத்தின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன?


திபெத்திய பழமொழி ஒன்று உள்ளது. நாம் சிறந்த எதிர்காலத்தில் நம்பிக்கை வேண்டும். ஆனால், அதே சமயம், மோசமான சூழலுக்கு தயாராக இருக்க வேண்டும். சீனர்களுடன் ஒரு தீர்மானத்தை எங்களால் எட்ட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். திபெத்துக்குத் திரும்புவோம். இது பிராந்தியத்தில் அதிக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கும். 


வரலாற்று ரீதியாக, உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டு நாடுகளுக்கு இடையில் நாங்கள் நடுவில் இருந்தோம். இப்போது நிலைமை நம்மை அனுமதித்தால் நாங்கள் பாலமாக இருக்க முடியும். எனவே, அந்த நோக்கத்திற்காக, ஒவ்வொரு சவாலையும் ஒரு வாய்ப்பாக மாற்றுகிறோம். இப்போது சுமார் 25 வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் திபெத்தியர்களின் இளைய தலைமுறையினருக்கான ஆதரவை திரட்டி வருகிறோம்.
 
அதே நேரத்தில், இந்த நிறுவனத்தை நிர்வகிப்பதில் கவனம் செலுத்துகிறேன். தரவுத்தளங்களை உருவாக்க, அமைப்புகளை உருவாக்க, ஒரு கட்டமைப்பை உருவாக்க சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்த ஒரு அமைப்பை உருவாக்கி வருகிறேன். எனவே, இவை முக்கியமான கூறுகள் என்று நான் நினைக்கிறேன்.


                                                                                                                                                                                                                                            தமிழில்: சுதர்சன்