முன்னாள் ஒலிம்பிக் வீரர் அலெக்ஸ் புல்லினின் காதலி, அவரது இறப்புக்குப் பின்னர் அவரது உடலிலிருந்து ஆரோக்கியமான விந்தணுவை எடுத்து அதன் மூலம் கருவுற்றிருக்கிறார். குழந்தையை வயிற்றில் சுமக்கும் ஃபோட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சி பொங்க பேசியிருக்கிறார். அலெக்ஸ் பாலின் இவர் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஸ்னோபோர்டு விளையாட்டில் பங்கேற்று இருமுறை உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றிருக்கிறார். இவர் 8 ஆண்டுகளாக எல்லிடி என்ற பெண்ணை காதலித்துவந்தார். இருவரும் கணவன், மனைவியாகவே வாழ்ந்து வந்துள்ளனர். தாங்கள் இணைந்து வாழ்ந்த காலத்தில் தங்களின் காதலின் சாட்சியாக ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள முயன்றனர். ஆனால், அது இயல்பாக அமையவில்லை. ஆகையால் ஐவிஎஃப் சிகிச்சை மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.


இந்நிலையில்தான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி இறந்தார்.  அலெக்ஸின் மறைவு எல்லிடி வ்லூகுக்கு பேரிடியாக இருந்தது. ஆனாலும் அவர்கள் இருவரின் விருப்பமாக இருந்த குழந்தைப் பேறு அவரின் மனதில் மீண்டும் மீண்டும் ஆசையை விதைத்தது. இதனால், இறந்துபோன கணவரின் உடலில் இருந்து விந்தணுக்களை உயிர்ப்பித்து அதனை தனது கருப்பையில் செலுத்தி கருவுற திட்டமிட்டார். இது குறித்து எல்லிடி மருத்துவர்களிடம் பேசினார். சிகிச்சை கைகூட அவர் இப்போது காதலன் மூலம் குழந்தையை சுமக்கிறார். அக்டோபர் மாதம் குழந்தையை பெற்றெடுக்கவுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் தாய்மை ததும்பும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.


மேலும், "சம்ப் நீ இந்த ஆண்டு அக்டோபரில் உலகுக்கு வரப்போகிறாய். செல்லக்குட்டியே உன்னைப் பற்றி நானும் அப்பாவும் நிறைய கனவு கண்டிருக்கிறோம். ஆனால் விதி விளையாடியது. அது உன் தந்தையை என்னிடமிருந்து பிரித்துவிட்டது. இருந்தாலும் அவரின் மிச்சமாக உன்னை நான் வரவேற்கிறேன். இந்த உலகுக்கு நீ மீண்டும் வரப்போகிறாய் புல்லின். கடந்த ஜூலை மாதம் நான் கர்ப்பம் தரிப்பேன் என்று நாம் இருவருமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் எதிர்பாராதவிதமாக நீ விபத்தில் இறந்துவிட்டாய். ஒருவேளை நான் அந்த மாதம் கர்ப்பம் தரிக்காவிட்டால் ஐவிஎஃப் முறை மூலமாக குழந்தை பெற்றுக்கொள்வதாக திட்டமிட்டோம். இது இப்போது நீ இல்லாமலேயே நான் அதை சரி செய்துள்ளேன். நான் எனது வாழ்நாள் முழுவதும் இதுவரை இப்படி மகிழ்ச்சியாக இருந்ததே இல்லை" என்று உணர்வுப்பூர்வமாக பதிவு செய்திருக்கிறார். 


காதல் என்றால் இதுதானோ என்று திகைக்கும் அளவுக்கு அலெக்ஸ் பாலின், எலிட்லி வ்லூக் காதல் கதை அமைந்திருப்பதாக இன்ஸ்டாகிராம்வாசிகள் புகழ்ந்து தள்ளுகின்றனர். குழந்தைக்கும் எலிட்லிகும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.