இலங்கை அதிபர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவு காரணமாக அந்நாட்டில் பொதுமக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களை அவர்கள் அடித்து நொறுக்கியதோடு, தீ வைத்து எரித்தனர். போராட்டக்காரர்களிடம் இருந்து தப்பித்த கோத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அதேபோல, அதிபர் பதவியில் இருந்தும் கோத்தபய ராஜினாம செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.




இந்த நிலையில், இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவிடம், அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கோத்தபய ராஜபக்சே எங்கிருக்கிறார் என்ற விவரங்கள் தெரியாத நிலையில், ரணில் விக்கிரமசிங்கேவை அதிபர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு எம்பிக்கள் பலர் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.




இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால் வரும் புதன்கிழமை அதிபராக பொறுப்பேற்றுக்கொள்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில், அனைத்துக் கட்சிகள் கலந்த அரசை அமைக்க எதிர்க்கட்சிகள் ஒத்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.