இலங்கையில் நடந்து வரும் மக்கள் போராட்டத்திற்கு அடிபணிந்து பிரதமர் பதவியை ராஜபக்சே நேற்று ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவருக்கு சொந்தமான வீட்டை பொதுமக்கள் நேற்று இரவு தீ வைத்து கொளுத்தினர். இந்த நிலையில், கொழும்பில் உள்ள பிரதம மந்திரிக்கு சொந்தமான அலரி மாளிகையில் இருந்து பலத்த ராணுவ பாதுகாப்புடன் மஹிந்த ராஜபக்சே வெளியேறினார்.


முன்னதாக நைஜீரியா நாட்டில் இருந்து சிறப்பு விமானம் ஒன்று இலங்கையில் உள்ள கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அதிகாலையில் தரையிறங்கியுள்ளது. இந்த விமானம் மூலமாக ராஜபக்சே வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவ காரணங்களை கூறி அவர் தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 




முன்னதாக, இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் அந்த நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால், கடுமையான அவதிக்குள்ளாகிய மக்கள் அந்த நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். ராஜபக்சே குடும்ப அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.


இந்த நிலையில், நேற்று அமைதியாக போராடிய பொதுமக்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய நிலையில் அவர்கள் மீது போராட்டக்காரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதனால், இலங்கையே வன்முறை பூமியாக மாறியது. மக்களின் போராட்டம் வன்முறையாக வெடித்ததால் போராட்டத்திற்கு அடிபணிந்த மஹிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.




மக்களின் போராட்டத்தை எதிர்த்த ஆளுங்கட்சி எம்.பி.யான அமரகீர்த்தி அத்துகொரலா மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால், ஆத்திரமடைந்த மக்கள் அவரை துரத்திச் சென்றனர். அப்போது, போராட்டக்காரர்களுக்கு பயந்த எம்.பி. அமரகீர்த்தி  தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அமைச்சர், அரசியல் தலைவர்கள் உள்பட 35 பேரின் இல்லங்களுக்கு தீ வைத்து எரித்தனர். தற்போது இலங்கை அரசுக்கு எதிராக கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தபால் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த 1000 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண