இலங்கையில் வரலாறு காணாத போராட்டம் காரணமாக கோட்டபய ராஜபக்ச கடந்த வாரம் அதிபர் பதவியிலிருந்து விலகிய நிலையில், இன்று நாடாளுமன்றத்தின் மூலம் அதிபர் தேர்வு செய்யப்பட உள்ளார். இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே, ராஜபக்சவின் முன்னாள் ஆதரவாளரான துலாஸ் அலகபெரும, இடதுசாரியான அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் அதிபர் தேர்வுக்கான போட்டிக்கு நேற்று முன்மொழியப்பட்டனர்.


ரகசிய வாக்கெடுப்பின் மூலம் அதிபர் தேர்வு செய்யப்பட உள்ளார். நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்ததையடுத்து போட்டி கடுமையாக மாறி உள்ளது. 


இதுகுறித்து அவர் ட்விட்டரில், "நான் நேசிக்கும் எனது நாட்டிற்கும், நான் நேசிக்கும் மக்களின் நலனுக்காகவும் அதிபர் பதவிக்கான எனது வேட்புமனுவை இதன் மூலம் வாபஸ் பெறுகிறேன். Samagi Jana Balawegaya கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் மற்ற எதிர்கட்சிகளும் இணைந்து துலாஸ் அலகபெருமவின் வெற்றிக்காக போராடும்" என பதிவிட்டுள்ளார்.


மேலும், இன்று நடைபெறும் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு இந்தியா உதவி செய்ய வேண்டும் என்றும் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். 


ராஜபக்சவின் இலங்கை பொதுஜன பெரமுன கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 100க்கும் மேற்பட்ட எம்பிக்கள் உள்ளனர். ஆனால், அவர்களில் பலர் தற்போது கட்சி சார்பற்று செயல்பட்டு வருகின்றனர். 


சஜித் தனது ஆதரவினை துலாஸ் அலகபெருமவுக்கு தெரிவித்திருப்பது அதிபர் தேர்தலில் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. மூன்று வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் துலாஸ் அலகபெருமவுக்கும் ரணிலுக்கும்தான் போட்டி என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.


ரணிலின் ஐக்கிய தேசிய கட்சிக்கு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் இல்லாத போதிலும், ராஜபக்சவின் கட்சி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.


கடந்த சில மாதங்களாக நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து கோட்டபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராகப் போராட்டம் வெடித்தது. இதையடுத்து மே மாதம் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ச பதவி விலக நேர்ந்தது.


மக்கள் போராட்டம் இலங்கையில் மிகத் தீவிரமடைந்ததால் சிங்கப்பூா் தப்பிச் சென்ற கோட்டபய ராஜபட்ச, அதிபா் பதவியை ஜூலை 14ஆம் தேதி ராஜினாமா செய்தாா். இந்தத் தகவலை நாடாளுமன்ற அவைத் தலைவா் அலுவலகம் ஜூலை 15ஆம் தேதி அறிவித்தது. இதையடுத்து பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க இடைக்கால அதிபராக அன்றே பதவியேற்றாா்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண