எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டி நின்ற  அஃப்ராமேக்ஸ் டேங்கர் அஃபினிட்டி வி (Aframax tanker Affinity) Vகப்பல் மீண்டும் மிதக்கத் தொடங்கியுள்ளதாக சூயஸ் கால்வாய் ஆணையம் (Suez Canal Authority (SCA)) தெரிவித்துள்ளது. 


சிங்கப்பூரை சேர்ந்த எரிபொருள்  கப்பலான அஃபினிட்டி வி சரக்கு போக்குவரத்து பாதைகளில் உலகின் முக்கிய நீர் வழித் தடங்களில் ஒன்றான எகிப்த் நாடின் சூயல் கால்வாய் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது, கப்பல் கால்வாயின் பக்கவாட்டில் சிக்கிக்கொண்டது.  64,000 டன் எரிபொருள் கொண்ட டேங்கர் கப்பலான அபினிட்டி வி 2016- இல் வடிவமைக்கப்பட்டது.  இது 252 மீட்டர் நீளமும் 45 மீட்டர் அகலமும் கொண்டது. போர்ச்சுகலில் இருந்து புறப்பட்ட இந்த கப்பல், சவுதி அரேபிய செங்கடல் துறைமுகமான யான்பு வரை செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.






இந்தப் பயணத்தின் போது, எதிர்பாராவிதமாக சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக,நேற்று இரவு  அஃபினிட்டி வி கப்பல்  கால்வாயில் 143வது கிமீ தொலைவில், கரை ஒதுங்கியது. அங்கேயே நின்றுகொண்டிருந்தது. இதனால், அந்த வழித் தடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மற்ற கப்பல்கள் ஏதும் இந்த வழியாக செல்ல முடியாமல் போனது. 






பின்னர்,  5-க்கும் மேற்பட்ட டக் படகுகள்  (tugboat assistance) உதவியுடன்  ராட்சத சரக்கு கப்பலை கரையில் இருந்து இழுத்து மீண்டும் மிதக்க வைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு,  அஃபினிட்டி வி கப்பல் மிதக்கத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து  சூயஸ் கால்வாயில் முற்றிலும் இயல்பு நிலை திரும்பியது.






சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஒசாமா ராபி கூறுகையில், கப்பலின் திசைமாற்றி பொறிமுறையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் அது கால்வாயின் கரையில் சிக்கியதாக கூறினார். தற்பொது அஃபினிட்டி வி கப்பல் தெற்கு நோக்கி மெதுவாக தனது பயணத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.