பாலை வனப்பகுதியில் அமைந்து இருந்தாலும், அரபு நாடுகளில் உள்ள வானுயர கட்டடங்களும், கலை நயங்களுக்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவமும் அங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் முக்கிய அம்சமாக உள்ளது. அதோடு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அங்குள்ள நகரங்கள் மென்மேலும் மெருகேற்றப்பட்டு வருவது, வெளிநட்டவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் தான் சுமார் 200 முதல் 335 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த,  பாங்கியா என்ற கண்டத்தின் பெயரால், பிரமாண்ட சொகுசுப்படகு ஒன்று சவுதி அரேபியாவில் கட்டமைக்கப்பட்டு வருகிறது.



                                             ”பாங்கியா” சொகுசுப் படகின் உட்புற மாதிரி தோற்றம் (courtesy:  lazzarini studio )



ஒரே நேரத்தில் 60 ஆயிரம் பேர் பயணிக்கக் கூடிய இந்த படகின் கட்டுமான பணிகள் நிறைவடையும் போது, உலகின் மிகப்பெரிய நகரும் கட்டமைப்பு எனும் பெருமையை அடையும் என கூறப்படுகிறது. இத்தாலியை சேர்ந்த  lazzarini எனும் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள ஆமை வடிவிலான,  இந்தசொகுசு படகை முழுமையாக கட்டி முடிக்க இந்திய மதிப்பில் ரூ.65,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 1,800 அடி நீளம், 2000 அடி அகலத்தில் இந்த படகு உருவாக்கப்படுகிறது. அதன் ஒவ்வொரு இறகு பகுதியிலும் சொகுசு வசதி கொண்ட 19 தனி வீடுகள் மற்றும் 64 அடுக்குமாடி குடியிருப்புகள் இடம்பெற்றுள்ளன.  




                               ”பாங்கியா” சொகுசுப் படகில் கட்டப்பட உள்ள வீடுகளின் மாதிரி தோற்றம் (courtesy:  lazzarini studio )


கூரைத் தோட்டம், வணிக வளாகங்கள், கடற்கரை கிளப், உணவகங்கள், சிறிய படகுகள் மற்றும் விமானங்களை நிறுத்துவதற்கான இடம்  ஆகியவற்றுடன், எப்போதும் கடலை காணும் வகையில் கண்ணாடிகளை கொண்டு கட்டடங்கள் உருவாக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் இடைவிடாமல் பயணிக்க உள்ள இந்த பிரமாண்ட சொகுசு படகு, கடல் அலைகள் மற்றும் கூரையில் உள்ள சோலார் பேனல்கள் மூலம், தனது இன்ஜினுக்கு தேவையான ஆற்றலை உருவாக்கிக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 9.2 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த படகு பயணிக்கக் கூடும். ”பாங்கியா” என்ற இந்த பிரமாண்ட சொகுசு படகை 8 ஆண்டுகளில் முழுமையாக கட்டி முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.