எழுத்தாளர் சல்மான் ருஷ்டியில் உடல்நிலை குறித்து அவரது முன்னாள் மனைவியும், சென்னையை பூர்விகமாகக் கொண்டவருமான பத்ம லக்ஷ்மி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.


கத்திகுத்துக்கு ஆளான சல்மான் ருஷ்டி


'மிட்நைட் சில்ட்ரன்', 'சாத்தானின் வேதங்கள்' உள்ளிட்ட பிரபல புத்தகங்களை எழுதியவரும், புக்கர் பரிசு வென்றவருமான எழுத்தாளர் சல்மான் ருஷ்டி முன்னதாக கத்திக்குத்துக்கு ஆளானார்.


75 வயது நிரம்பிய சல்மான் ருஷ்டி, ‘சாத்தானின் வேதங்கள்’ புத்தகத்துக்காக கடந்த 1988ஆம் ஆண்டு தொடங்கி கடும் எதிர்ப்புகளையும் கொலை மிரட்டல்களையும் சந்தித்து வந்த நிலையில், முன்னதாக ஆகஸ்ட் 12ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றில் அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டு கத்திக்குத்துக்கு ஆளானார்.


முன்னாள் மனைவி ட்வீட்


தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வந்தார். தற்போது அவர் ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுள்ள நிலையில், ருஷ்டியின் முன்னாள் மனைவியும், தொலைக்காட்சி பிரபலமுமான பத்ம லக்ஷ்மி ட்வீட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.


“ஆகஸ்ட் 12ஆம் நாள் அன்றைய மோசமான இரவுக்குப் பிறகு சல்மான் ருஷ்டி தேறி வருகிறார். வார்த்தைகள் இல்லை, கவலையில் இருந்து மீண்டு நிம்மதியாக தற்போது நிம்மதியாக மூச்சு விட முடிகிறது.  விரைவில் அவர் குணமடைவார் என நம்புகிறேன்” என ட்வீட் செய்துள்ளார். 


 






சென்னையை பூர்விகமாகக் கொண்ட பத்ம லக்ஷ்மி, கடந்த 2004ஆம் ஆண்டு சல்மான் ருஷ்டியை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து 2007ஆம் ஆண்டு விவாகரத்து பெற்ற நிலையில், தற்போது இருவரும் நட்புறவுடன் தங்கள் உறவைத் தொடர்ந்து வருகின்றனர்.


மும்பையில் பிறந்தவர்




1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு ஜூன் மாதம் 19ஆம் தேதி அப்போதைய பம்பாயில் பிறந்தவர்தான் சல்மான் ருஷ்டி. இவரது முழுப்பெயர் அகமது சல்மான் ருஷ்டி. இந்தியாவில் பிறந்த சல்மான் ருஷ்டி தன்னுடைய 14ஆவது வயதில் படிப்பிற்காக இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற கிங்ஸ் கல்லூரியில் அவருக்கு படிக்க வாய்ப்பு கிடைத்தது. அங்கு வரலாற்றுத் துறையில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார்.


இஸ்லாமியரான சல்மான் ருஷ்டி இஸ்லாத்தின் மீதான நம்பிக்கைகளை துறந்தார். அவருக்கு பிரிட்டிஷ் குடியுரிமையும் கிடைத்தது. சிறு சிறு வேடங்கள் மூலமாக தன்னை நடிகராகவும் சல்மான் ருஷ்டி அடையாளம் காட்டினார். அதன்பின்பு, அவருக்கு எழுத்தின் மேல் இருந்த ஆர்வத்தால் எழுத்துலகில் நுழைந்து கோலோச்சத் தொடங்கினார்.


புயலைக் கிளப்பிய நாவல்


1998ஆம் ஆண்டு வெளியான இவரது ’த சாட்டனிக் வெர்சஸ்’ (சாத்தானின் வேதங்கள்) நாவலுக்கு எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக இந்த நாவலுக்கு இந்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து, பாகிஸ்தானும் இந்த நாவலுக்கு தடை விதித்தது. உலகம் முழுவதும் இஸ்லாமியர்களின் கண்டனக் குரல்களுக்கு ஆளானாலும், சாட்டனிக் வெர்சஸ் நாவல் விற்பனையில் சக்கைப் போடு போட்டது. இந்த நாவலுக்கு எழுத்துலகின் மிகப்பெரிய விருதான விட்பிரெட் பரிசு வழங்கப்பட்டது.




அதேசமயத்தில், பல நாடுகளிலும் இந்த நாவலுக்கு எதிராக போராட்டம் அதிகரித்தது. இங்கிலாந்தின் ப்ராட்போர்டில் இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து இந்த நாவலின் நகலை எரித்தனர். 1989ம் ஆண்டு ஈரானின் மதத் தலைவர் ஹயதுல்லா ருஹோல்லா கோமேனி சல்மான் ருஷ்டிக்கு பத்வா எனும் மதக்கட்டளையை பிறப்பித்ததுடன் அவரை கொல்லுமாறு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, உயிர் அச்சுறுத்தலுக்கு ஆளான சல்மான் ருஷ்டிக்கு பிரிட்டிஷ் அரசு ஆதரவளித்தது. அதேசமயத்தில், சல்மான் ருஷ்டி தனது மனைவியுடன் பிரிட்டிஷ் அரசு உதவியுடன் தலைமறைவு வாழ்வு அளித்தார்.


தொடர் மிரட்டல்கள்


உலகம் முழுவதும் இருந்து வந்த தொடர் கொலை மிரட்டல்களாலும், பிரிட்டிஷ் உள்ளிட்ட மேலை நாடுகள் சல்மான் ருஷ்டிக்கு ஆதரவு அளித்ததாலும் பிரிட்டிஷ் நாட்டிற்கும், ஈரானுக்கும் இடையே இருந்த உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஈரானின் தெஹ்ரானில் இருந்த பிரிட்டிஷ் தூதரகம் தாக்கப்பட்டது.


சல்மான் ருஷ்டியின் உயிருக்கு ரூபாய் 3 மில்லியன் வரை பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில், 1998ம் ஆண்டு ஈரான் அரசு ருஷ்டிக்கு எதிராக பிறப்பித்த பத்வாவை திரும்ப பெற்றது. அதற்கு பிறகு சல்மான் ருஷ்டி ஏராளமான நூல்களை எழுதினார். கடந்த 2021ஆம் ஆண்டு சாட்டன் வெர்சஸ் புத்தகத்தினால் நிகழ்ந்த நினைவுகள் பற்றி நாவலாக ருஷ்டி எழுதி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.