Continues below advertisement

உக்ரைன் உடனான போரை நிறுத்தும் முயற்சிக்கு ஐரோப்பிய நாடுகள் தடையாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள ரஷ்ய அதிபர் புதின், ஐரோப்பா போரை விரும்பினார், ரஷ்யா இப்போதே தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளார். அவர் என்ன கூறினார் என்பதை தற்போது முழுமையாக பார்க்கலாம்.

ஐரோப்பிய நாடுகளை எச்சரித்த புதின்

ரஷ்யா-உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 28 அம்சங்களை கொண்ட அமைதித் திட்டத்தை முன்மொழிந்து, அதன் மீது பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.

Continues below advertisement

ட்ரம்ப்பின் அமைதி ஒப்பந்தத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று உக்ரைனும், அந்நாட்டுக்கு ஆதரவாக உள்ள ஐரோப்பிய நாடுகளும் வலியுறுத்தின. இதையடுத்து, ட்ரம்ப்பின் அமைதி ஒப்பந்தத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, அதன் மீது விவாதங்கள் நடந்தன. திருத்தப்பட்ட அமைதித் திட்டத்திற்கு உக்ரைனும் வரவேற்பு தெரிவித்தது.

இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த முதலீட்டு மன்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அந்நாட்டு அதிபர் புதின்உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஐரோப்பிய அரசுகள் ரஷ்யாவால் ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைத்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அமெரிக்காவும், அதன் அதிபர் ட்ரம்ப்பும் மேற்கொள்ளும் முயற்சிகளை, ஐரோப்பிய நாடுகள் தடுத்து வருவதாகவும் சாடினார்.

தொடர்ந்து, “நாங்கள் ஐரோப்பாவுடன் போருக்குச் செல்லத் திட்டமிடவில்லை. ஆனால், ஐரோப்பா விரும்பினால், போரை தொடங்கினால், நாங்கள் இப்போதே தயாராக இருக்கிறோம்.“  என்று புதின் எச்சரித்தார். மேலும், அவர்கள்(ஐரோப்பிய நாடுகள்) போரின் பக்கம் இருக்கிறார்கள் என்றும் ஐரோப்பிய தலைவர்கள் அமைதியான அணுகுமுறையை கைவிட்டு, உக்ரைனில் தொடர்ந்து விரோதப் போக்கை ஆதரித்து வருவதாகவும் புதின் விமர்சித்தார்.

ரஷ்ய கப்பல்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி உள்ளதை, ஒரு கடற்கொள்ளை என விமர்சித்த புதின், அதற்கு பதிலடியாக உக்ரைன் துறைமுகங்கள் மற்றும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்த தாக்குதலை தடுக்க கடலில் இருந்து உக்ரைனை துண்டிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்திய பயணம் குறித்து பேசிய புதின்

தொடர்ந்து, தனது இந்திய பயணம் குறித்து பேசிய புதின், “இந்திய பயணத்தின் போது நானும், பிரதமர் மோடியும் இந்திய இறக்குமதிகள் குறித்து விவாதிப்போம். இந்திய இறக்குமதியை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடத்துவோம். எங்கள் தேசிய நலன்களை கருத்தில் கொண்டு செயல்படும், பொருளாதாரக் கொள்கையை நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவோம்.“ என்று தெரிவித்தார்.