இங்கிலாந்து நாட்டின் மகாராணி எலிசபெத் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து அவரது மறைவிற்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உலகின் நீண்டகாலம் ராணியாக ஆட்சி செய்த பெருமைக்குரிய இரண்டாவது நபர் என்ற பெருமைக்கு ராணி எலிசபெத் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்த 10 நாள்களுக்கு அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. தொடர்ந்து மகாராணி எலிசபெத்தின் மகன் மன்னர் மூன்றாம் சார்லஸின் பதவியேற்பு விழா நடைபெறும்.


பிரிட்டன் தவிர மொத்தம் 14 நாடுகளுக்கு ராணியாகத் திகழ்ந்தும், நீண்ட காலம் ஆட்சி புரிந்தவராகவும் விளங்கி சாதனைகள் படைத்த எலிசபெத் மகாராணியின் கட்டுக்குள் அடங்காமல் வலம் வந்தவர் அவரது சகோதரி மார்கரேட். 


 






1926ஆம் பிறந்த எலிசபெத் மகாராணிக்கும் அவரைவிட 4 வயது இளையவரான அவரது சகோதரிக்கும் இடையேயான உறவு மிகவும் சிக்கலுக்கு உரியதாக விளங்கியதாக இங்கிலாந்து ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.


எலிசபெத் மகாராணியும் இளவரசி மார்கரேட்டும் குழந்தைப் பருவத்தில் இணைபிரியா சகோதரிகளாகவே வலம் வந்துள்ளனர். இளமைப் பருவத்தில் பொறுப்பானவராகவும், பிறரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நடப்பவராகவும் மகாராணி எலிசபெத் வலம் வந்த நிலையில், மார்க்கரேட் மற்றொருபுறம் துடிப்பானவராகவும், பெரும் நண்பர்கள் குழுவைக் கொண்டவராகவும், காக்டெய்ல் விருந்து பார்ட்டிகள், புகைப்பழக்கம் என பல்வேறு பழக்கவழக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்


 






இவர்களது தந்தையான ஜார்க் ஆறாம் மன்னர் எலிசபெத்தை தனது பெருமை என்றும், அவரது இளைய சகோதரி மார்கரேட்டை தன் மகிழ்ச்சி என்றுமே குறிப்பிட்டு வந்துள்ளார். உடைகள் தொடங்கி அன்றாட நடவடிக்கைகள் வரை இணைபிரியாதவர்களாக வலம் வந்த இந்த சகோதரிகளிடையே ஜார்ஜ் ஆறாம் மன்னரின் இறப்புக்குப் பிறகு சிறு இடைவெளி ஏற்பட்டதுடுள்ளது.


அரச பொறுப்புகளை ஏற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளான மகாராணி எலிசபெத்தால் அவரது சகோதரியுடன் போதிய நேரத்தைக் கழிக்க முடியவில்லை. மார்க்கரேட் பக்கிங்ஹாம் அரண்மனையை விட்டு வெளியேறி தன் தாயுடன் கிளாரஸ் மாளிகையில் வசிக்கத் தொடங்கிய நிலையில், தன் மூத்த சகோதரியும், மகாராணியுமான எலிசபெத்தின் கவனத்தை ஈர்க்க பெரிதும் முனைந்துள்ளார்.


 






ஊடக வெளிச்சத்தை விரும்பிய இளவரசி மார்க்கரேட்டுக்கு மகாராணி எலிசபெத் மீது சிறு பொறாமை தோன்றியதாவும் கூறப்படுகிறது மார்க்கரேட் தன்னை விட 16 வயது மூத்தவரான பிரிட்டிஷ் விமானப்படை அதிகாரி கேப்டன் பீட்டர் டவுன்செண்ட் உடன் காதலில் விழுந்து திளைத்திருந்த நிலையில், இவர்களது திருமணத்தை எலிசபெத் மகாராணி நடத்தி வைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.


பீட்டர் டவுன்செண்ட் ஏற்கெனவே விவாகரத்து பெற்றவர், அந்த நேரத்தில் 23 வயது மட்டுமே நிரம்பியவராக மார்க்கரேட் இருந்த நிலையில் இவர்களது திருமணத்துக்கு அரச குடும்பக் கட்டுப்பாடுகள் முட்டுக்கட்டையாக இருந்தன. இங்கிலாந்து தேவாலயம், மத குருமார்கள் தரப்பிலிருந்தும் பெரும் எதிர்ப்புகள் வந்தன.


திருமணம் செய்ய 25 வயது நிரம்ப வேண்டும், அரச குடும்ப அந்தஸ்தை இழக்கவேண்டும் என ஏகப்பட்ட முட்டுக்கட்டைகளை மார்க்கரேட் சந்தித்த நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவிக்க முடியாத சூழலுக்கு மகாராணி எலிசபெத் தள்ளப்பட்டார். 


 






இதனையடுத்து பீட்டர் டவுன்செண்ட் புதிய பதவியேற்று வேலைக்காக வெளிநாடு செல்ல மார்க்கரேட்டின் காதல் வாழ்வு முடிவுக்கு வந்து, பெரும் சோகத்துக்கு ஆளானார். தன் தங்கையை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்திய எலிசபெத், அவரை மீட்டெடுக்க பெருமளவு பிரயத்தனப்பட்டதாகவும், கவலையில் ஆழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.


தொடர்ந்து சில ஆண்டுகளுக்குப் பின் புகைப்படக்காரர் ஆண்டனி ஆர்ம்ஸ்ட்ராங் என்பவருடன் மீண்டும் காதலில் விழுந்து அவரை மார்க்கரேட் கரம்பிடித்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் விவாகரத்து பெற்றனர்.


 






இங்கிலாந்து அரச குடும்பத்தின் பெரும் சர்ச்சைக்குரிய நபராகவும், தனிப்பட்ட வாழ்க்கையால் ஊடக வெளிச்சத்தின் பிடியிலும் இருந்த மார்க்கரேட்டை கையாள முடியாமல் மகாராணி எலிசபெத் திண்டாடியதாக ஒருபுறம் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மற்றொருபுறம் இவர்கள் தங்கள் ஆளுமை, மாறுபாடுகளைக் கடந்து ஒருவருக்கொருவர் இறுதிவரை உறுதுணையாக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இளவரசி மார்க்கரேட் நான்காவது தடவையாக பக்கவாதம் ஏற்பட்டதில் 2002ஆம் ஆண்டு தன் 71ஆம் வயதில் உயிரிழந்தார்.