இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறை ( UPI ) மற்றும் சிங்கப்பூரின் பேநவ் ஆகியவற்றின் இணைப்பு சேவைகள் எல்லைதாண்டி தொடங்கப்பட உள்ளது. 



சிங்கப்பூரில் உள்ள இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள சிங்கப்பூர் வாழ் மக்கள் ஆகியோருக்கு பணப்பரிமாற்றத்திற்கு உதவிகரமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  


பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ஆகியோர் முன்னிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான, இணைப்புச் சேவைகளான இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறை ( யுபிஐ ) மற்றும் சிங்கப்பூரின் (பேநவ்) ஆகியவை தொடங்கிவைக்கப்படுகிறது. 


இரு நாடுகளை இணைக்கும் வகையிலான பரிவர்த்தணை சேவைகளானது பிப்ரவரி 21, 2023 காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைக்கப்படவுள்ளது.


இந்த சேவையை இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் மற்றும் சிங்கப்பூர் நிதி ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் ஆகியோர் தொடங்கிவைக்கின்றனர்.




பொருளாதாரத்துடன் கூடிய தொழில்நுட்பப் புத்தாக்க நடவடிக்கைகளில், முன்னேறிய நாடுகள் மத்தியில் இந்தியாவும் மிக வேகமாக வளர்ச்சிப் பெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், டிஜிட்டல் முறையிலான  பணப்பரிவர்த்தனை, உலக அளவிலான பங்கேற்பை உறுதி செய்து வருகிறது.


பிரதமரின் தொலைநோக்கு பார்வையின் முக்கிய அம்சமாக, ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறையின்  பயன்பாடுகளை இந்தியாவோடு வரையறுத்துக் கொள்ளாமல், மற்ற நாடுகளும் பெறவேண்டும் என்ற வகையில் முன்னெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி இந்தியாவின் யுபிஐ சிங்கப்பூருடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. மேலும் சிங்கப்பூரின் பேநவ் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளப்படவுள்ளது. 




இந்த இரண்டு பணப்பரிமாற்ற முறைகளை இணைப்பதன் மூலம் இரு நாடுகளைச் சேர்ந்த மக்கள் வேகமாகவும், சிக்கனமாகவும் எல்லை தாண்டிய பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


மேலும், சிங்கப்பூரில் உள்ள இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள், மாணவர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள சிங்கப்பூர் வாழ் மக்கள் ஆகியோர், குறைந்த செலவில் பணப்பரிமாற்றம் செய்ய முடியும் எனவும் அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.