Pakistan Economic Crisis : பாகிஸ்தான் நாட்டின் நாணயமான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை கண்டுள்ளது.


கடும் பொருளாதார நெருக்கடி


இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றால் திணறி வரும் பாகிஸ்தான், வரும் மாதங்களில் மேலும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


 ஒரு வேளை உணவிற்கே நடுத்தர மற்றும் கீழ்தட்டில் இருக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தவிர பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைதுக்கு எதிராக நடைபெற்று வரும் கலவரம் அந்நாட்டில் பெரும் பதறத்தை ஏற்படுத்தியுள்ளது.


பணவீக்கம்


இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் பணவீக்கமானது 36.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 1964-ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த மாதம் உயர்ந்துள்ளதாக தெரிகிறது. மார்ச் மாதத்தில் பணவீக்கமானது 35.4 சதவீதமாக இருந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் 36.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. 


இதனை அடுத்து, பாகிஸ்தானில் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத  அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்படி, பாகிஸ்தானில் ரூபாயின் மதிப்பானது ரூ.300 ஆக சரிந்துள்ளது.  கடந்த மார்ச் மாதத்தல் ரூ.283 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.300 ஆக சரிந்துள்ளது. எனவே ரூபாய் மதிப்பு 3.3 சதவீதம் சரிந்து ஒரு டாலருக்கு ரூ.300 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. 20 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத வகையில் ஒரே நாளில் அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 3.3 சதவீதம் சரிந்துள்ளது.


இதற்கிடையில், பாகிஸ்தான் பங்குச்சந்தை இன்று கடும் சரிவை கண்டது. அதன்படி, கராச்சி பங்குச்சந்தை 298.86 புள்ளிகள் சரிந்து 41,074.95 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விலைவாசி உயர்வு, பணவீக்கம் இருந்து வரும் நிலையில், தற்போது பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பானது ரூ.300 ஆக சரிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இம்ரான் கான் கைது


பாகிஸ்தானில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது செய்யப்பட்ட விவகாரம் நாட்டையே புரட்டி போட்டுள்ளது. நேற்று முன்தினம் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து இம்ரானை கானை இஸ்லாமாபாத் காவல்துறை கைது செய்தது. 


இம்ரான் கான் கைது செய்யப்பட்டதோடு அதை தடுக்க முயன்ற அவரது வழக்கறிஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இம்ரான் கைது செய்யப்பட்டதை கண்டித்து அந்நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.


இம்ரான்கான் பிரதமராக இருந்த காலத்தில் அரசு முறை பயணமாக சில வெளிநாடுகளுக்கு சென்றார். பாகிஸ்தான் சட்ட விதிப்படி, அந்தநாட்டு பிரதமராக பொறுப்பு வகிக்கும் ஒருவர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது வழங்கப்படும் பரிசுப்பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பது விதி. அந்த பரிசுப்பொருட்களை சேமித்து பராமரிக்கும் பணியை “தோஷகானா” செய்து வருகிறது. ஆனால், இம்ரான்கானோ அதை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் தன்னுடைய சொந்த கணக்கில் சேர்த்துக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.