பாகிஸ்தானில், தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், அந்நாட்டு விமானப்படை இன்று நடத்திய வான்வழித் தாக்குதல்களில், பெண்கள், குழந்தைகள் உட்பட குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அது குறித்து தற்போது பார்க்கலாம்.

Continues below advertisement

அநியாயமாக கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்கள்

பாகிஸ்தானில் இன்று கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர். அதிகாலை 2 மணியளவில் பாகிஸ்தான் போர் விமானங்கள் திரா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மாட்ரே தாரா கிராமத்தில் 8 LS-6 குண்டுகளை வீசி பெரும் படுகொலையை ஏற்படுத்திய சம்பவம் நடந்தது. இறந்தவர்கள் அனைவரும் பொதுமக்கள். பலர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், அவர்களின் நிலைமை தெளிவாகத் தெரியவில்லை.

சம்பவ இடத்தின் படங்களிலும், காணொளிகளிலும், குழந்தைகள் உட்பட பலரது உடல்கள் சிதறிக் கிடப்பது வெளியாகியுள்ளது. இடிபாடுகளுக்கு அடியில் உடல்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

Continues below advertisement

ஆபத்தில் வாழும் பொதுமக்கள்

கைபர் பக்துன்க்வாவில், கடந்த காலங்களில் பல பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், அப்பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜூன் மாதத்தில், கைபர் பக்துன்க்வாவில் மீண்டும் மீண்டும் நடக்கும் ட்ரோன் தாக்குதல்கள், பொதுமக்கள் வாழ்க்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளதாக கூறப்படுகிறது.

"கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அதிகரித்து வரும் ட்ரோன் தாக்குதல்களுக்கு தொடர்ந்து விலை கொடுத்து வரும் பொதுமக்களின் உயிர்களையும், சொத்துக்களையும் பாதுகாக்க, பாகிஸ்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ட்ரோன் தாக்குதலில் ஒரு குழந்தை கொல்லப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து அதிகரித்துவரும் ஆபத்தான தொடர் தாக்குதல்களின் ஒரு பகுதியாகும்" என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவிற்கான துணை பிராந்திய இயக்குநர் இசபெல் லாசி கூறியுள்ளார்.

கைபர் பக்துன்க்வாவில் தொடரும் பயங்கரவாத சம்பவங்கள்

கைபர் பக்துன்க்வா காவல்துறையின் கூற்றுப்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை மாகாணத்தில் 605 பயங்கரவாத சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் குறைந்தது 138 பொதுமக்களும் 79 பாகிஸ்தான் காவல்துறையினரும் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 129 சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதில் 6 பாகிஸ்தான் ராணுவம் மற்றும் துணை ராணுவ கூட்டாட்சி கான்ஸ்டாபுலரி பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) முழுவதும் 9 முக்கிய பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்து அழித்த ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, ஜெய்ஷ்-இ-முகமது (JeM) மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் (HM) போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஆப்கான் எல்லைக்கு அருகில் உள்ள கைபர் பக்துன்க்வாவிற்குள் ஆழமாக புதிய தளங்களை அமைத்து வருகின்றன.

அந்த மாகாணத்தின் மலைப்பகுதி, ஆப்கானிஸ்தானுடனான எல்லைகளுடன் இணைந்து, இயற்கையான மறைவிடத்தை வழங்குகிறது. 1980-களின் சோவியத் எதிர்ப்பு ஆப்கான் போரின் போதும், 9/11 தாக்குதல்களைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க படையெடுப்பின் போதும் கட்டப்பட்ட மறைவிடங்கள் இன்னும் பல பகுதிகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.