பாகிஸ்தானில் அதிகாலையில் நேர்ந்த விபத்தில் 7 மாத குழந்தை உட்பட 10 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கொடூர விபத்து:


பாகிஸ்தானில் குடியிருப்பில் அதிகாலையில் குளிர்சாதன பெட்டி பலத்த சத்தத்துடன் வெடித்ததை தொடர்ந்து, ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் வீட்டில் இருந்த 7 மாத குழந்தை, 5 சிறுவர்கள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.


நடந்தது என்ன?


பாகிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான பஞ்சாப்பின் தலைநகர் தான் லாகூர். அங்கு மக்கள் அதிகம் வசிக்கும்  பகுதியான நூர் மெகல்லாவில் உள்ள வீட்டில் கூட்டு குடும்பம் ஒன்று வசித்து வந்தது. இந்நிலையில்,  நள்ளிரவு 2 மணியளவில் அந்த கட்டடத்தில் அதிகப்படியான சத்ததுடன் ஏதோ வெடித்த சத்தம் கேட்டுள்ளது. அடுத்த சில நிமிடங்களுக்கு எல்லாம், வீட்டில் பற்றிய தீ மளமளவென பரவ தொடங்கியது. இதனால் அந்த இடத்தை கரும்புகை சூழ,  அதனை கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.


சரிந்த கட்டடம்:


உடனடியாக விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படையினருடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தண்ணீரை பீய்ச்சியடித்து கட்டடம் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் தீயினால் கட்டடம் முழுவதும் எரிந்து சேதமானது. கட்டடத்தின் ஒருபகுதி உருதெரியாமல் சிதைந்து சரிந்து விழுந்தது.


விபத்திற்கு காரணம் என்ன?


தீ கமுழுவதும் அணைக்கப்பட்ட பிறகு  தீயணைப்பு வீரர்கள் சிதிலமடைந்த வீட்டிற்குள் மீட்புப் பணிக்காக நுழைந்தனர். அப்போது உடல்பாகங்கள் கருகிய நிலையில் ஆங்காங்கே பிணக்குவியல்களால் அந்த வீடு நிறைந்து இருந்தது. இறந்தவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. தொடர்ந்து,  தடயவியல் நிபுணர்களுடன் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தீவிரவாதிகள் சதித்திட்டத்தின் பேரில் தாக்குதல் ஏதேனும் அரங்கேறியதா? என்ற கோணத்தில் நடைபெற்ற விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.


வெடித்து சிதறிய குளிர்சாதன பெட்டி:


இதுதொடர்பாக காவல்துறையினர் தெரிவித்துள்ள தகவலின் படி “நள்ளிரவில் வீட்டில் திடீரென மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியின் கம்ப்ரசர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில்,  வீடு தீப்பிடித்து கரும்புகை வெளியானது. புகையை சுவாசித்ததால் குடும்ப உறுப்பினர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளனர். மேலும் கண்ணிமைக்கும் நேரத்தில் வீடு முழுவதும் தீ பரவியதில்,  உள்ளே இருந்த 7 மாத குழந்தை, 5 சிறுவர்கள் உள்பட 10 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்”. கட்டடத்தில் இருந்து படுகாயங்களுடன் குதித்து வெளியேறிய ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் இரங்கல் தெரிவித்துள்ளார்.