இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்புக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) பொறுப்பேற்றுள்ள போதிலும் இதற்கு காரணம் இந்திய தான் என்று பாக் பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்லாமபாத் தாக்குதல்:
இந்தியாவில் நேற்று தலைநகர் டெல்லி ஐ20 காரில் இருந்த வெடிப்பொருள் இருந்ததில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக NIA மற்றும் NSG தீவிர விசாரணை மேற்க்கொண்டு 4 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத் நகரின் ஜி-11 பகுதியில் உள்ள நீதிமன்ற வளாக நுழைவாயிலுக்கு அருகே இன்று காலை தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இதில் 12 பேர் உயிரிழந்ததாக அரசு நடத்தும் பாகிஸ்தான் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்கள் இஸ்லாமாபாத் பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இந்த குண்டுவெடிப்பில் , 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தற்கொலை குண்டுவெடிப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் நடத்திய நபரின் தலை சாலையில் சிதறிய நிலையில் கிடந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாக் பிரதமர் குற்றச்சாட்டு:
இந்த தாக்குதலுக்கு தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) தீவிரவாத படை பொறுப்பேற்ற நிலையில், தாக்குதலுக்கு இந்தியா தான் காரணம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றம் சாட்டியுள்ளார்
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “பாகிஸ்தானை நிலைகுலைய செய்யும் வகையில் இந்திய அரசின் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பு ஒன்று இஸ்லாமாபாத்தில் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இதே அமைப்புதான் வானா பகுதியிலும் தாக்குதல் நடத்தியது. அதில் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவின் ஆதரவுடன் திட்டமிடப்பட்ட இந்த தாக்குதலுக்கு வெறும் கண்டனங்கள் போதாது” என்று கடுமையான பேசியிருந்தார்.
ஜி-11 நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பு, டிசம்பர் 2022க்குப் பிறகு இஸ்லாமாபாத்தில் நடந்த மிக மோசமான தாக்குதலாகும். இதுபோன்ற செயல்கள் “பயங்கரவாதத்தை முற்றிலுமாக வேரறுக்கும் பாகிஸ்தானின் உறுதியை அசைக்க முடியாது” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.