New York Flood: அமெரிக்காவில் ஒரே இரவில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக நியூயார்க் நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


கொட்டித்தீர்த்த கனமழை:


உலகின் முக்கிய நகரங்களில் ஒன்றாக அமெரிக்காவின் நியூயார்க் நகரம் காணப்படுகிறது.   இங்கு நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் நகரமே வெள்ளக்காடாகிவிட்டது. சுரங்கப்பாதைகள், தெருக்கள், நெஞ்சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியது. ஒரு மாத கால அளவிற்கு பெய்ய வேண்டிய மழை, நேற்று முன்தினம் ஒரே இரவில் பெய்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 






மேலும்,  நியூயார்க் நகரத்தில் உள்ள சுரங்கப்பாதைகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அதன் சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. ரயில்கள், பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. 50 விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நகரத்தில் இருந்த சில வீடுகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும், பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளன. நியூயார்க் ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் 21.97 செ.மீ அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. கடைசியாக 1960ஆம் ஆண்டு தான் இந்த அளவுக்கு மழை அளவு பதிவானது. 







நாசா சொன்ன அதிர்ச்சி தகவல்:


மேலும், தெருக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் உள்ளவர்கள் வேறு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இதனை அடுத்து, நியூயார்க் நகர ஆளுநர் கேத்தி ஹோச்சுல கூறுகையில், "இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு குறித்து நாங்கள் கவனித்து வருகிறோம். நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிப்பதால் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் இதுவரை எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இப்படியிருக்கும் நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரம் எதிர்காலத்தில் கடலுக்குள் செல்ல உள்ளதாக நாசா அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்திருக்கிறது. கால நிலை மாற்றம் காரணமாக கடல் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. கடல் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவிற்கு மேல் உயர்ந்தால், உலகின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படலாம் என்று நாசா தெரிவித்துள்ளது. இதில் நியூயார்க் நகரமும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.