கிரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரம் திடீரென ஆரஞ்சு நிறமாக காட்சியளித்ததால் அங்குள்ள பொதுமக்கள் பீதியடைந்தனர். 


தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் ஒன்றான கிரீஸ் பல்வேறு சிறப்புகளுக்கு பெயர் பெற்றது. பால்கன் தீபகற்பத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ள இந்த நாட்டின் தலைநகரமாக ஏதென்ஸ் நகரம் உள்ளது. அட்டிக் சமவெளியில் அமைந்துள்ள இந்த நகரம் மிகப்பெரிய பரப்பளவை கொண்டது. 3 பக்கம் மலைகளால் சூழப்பட்ட ஏதென்ஸ் நகரம் உலகின் மிகவும் தொன்மையான நகரங்களில் ஒன்றாக உள்ளது. கிரேக்க சாம்ராஜ்யத்தின் மையப்புள்ளியாக விளங்கும் ஏதென்ஸ் நகரம் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 


நவீன ஒலிம்பிக் போட்டியின் தாயகமாக விளங்கும் கிரீஸ் நாட்டில் பல்வேறு சிறப்பு வாய்ந்த நினைவு சின்னங்களும், பண்டைய கால கட்டடங்களும் உள்ளது. இதனால் வெளிநாட்டினர் விரும்பி சுற்றுலா செல்ல விரும்பும் நகரமாக உள்ள ஏதென்ஸ் உள்ளது. இந்நிலையில் இந்த நகரில் உள்ள சிண்டக்மா சதுக்கம், பார்த்தியான் ஆலயம், லிகாப்டஸ் குன்று உள்ளிட்ட பகுதிகள் நேற்று ஆரஞ்சு நிறமாக மாறியது. இதனால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் அதிர்ச்சியடைந்தனர். 






பார்ப்பதற்கு செவ்வாய் கிரகத்தை காண்பது போல இருந்த ஏதென்ஸ் நகரம் இப்படி காட்சியளிக்க என்ன காரணம் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விளக்கமளித்துள்ளது. அதாவது, “வட ஆப்பிரிக்காவில் இருந்து மேக கூட்டங்கள் இந்த காலக்கட்டத்தில் கிரீஸ், மாசிடோனியா, சிப்ரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு நகர்வது இயற்கையான ஒன்று தான். இந்த மேக கூட்டத்துடன் சஹாரா பாலைவனத்தின் மண் துகள்கள் கலந்ததால் புழுதி புயல் தாக்கியுள்ளது. இதனால் அந்நகரம் ஆரஞ்சு கலரில் தெரிந்தது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதென்ஸ் நகரம் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 




மேலும் படிக்க: Everest MDH Masala Ban: எவரெஸ்ட்,எம்.டி.ஹெச். மசாலாவிற்கு சிங்கப்பூர், ஹாங்காங்கில் தடை! ஏன்?